சிங்கப்பூர் வரலாற்றில் ஆகச் சவாலான நேரத்தில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கவனம் முழுவதும் கொவிட்-19 நோய்ப் பரவல் நெருக்கடி மீது இருக்க வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து இருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் கடந்த வாரங்களில், நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களிலும் கொவிட்-19 நெருக்கடி குறித்து எதுவும் இடம்பெறவில்லை என்று அமைச்சர் சான் கூறியுள்ளார்.
“இந்த நெருக்கடியில் இருந்து எப்படி விடுபடப் போகிறோம் என்பதே இப்போதும் மிக முக்கியமான, மைய அம்சமாக விளங்கி வருகிறது,” என்று திரு சான் குறிப்பிட்டார்.
கொரோனா நெருக்கடியில் இருந்து எப்படி மீளப் போகிறோம் என்பதை வாக்காளர்களிடம் பகிர்ந்துகொள்வது குறித்து ஆளும் மக்கள் செயல் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் மசெக வேட்பாளர் குழுவிற்குத் தலைமையேற்று இருக்கும் திரு சான், ‘ஏபிசி பிரிக்வொர்க்ஸ்’ சந்தையில் நேற்று தொகுதி உலாவை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.
“மசெக எத்தனை இடங்களைக் கைப்பற்றும், தேர்தலுக்குப் பின் அந்த எதிர்க்கட்சி இருக்குமா போன்றவற்றைப் பற்றியது அல்ல இந்தத் தேர்தல். உண்மையில், கிருமித்தொற்றில் இருந்து மீள்வது எப்படி என்பதற்கான தேர்தலே இது,” என்றார் திரு சான்.
தேர்தல் பிரசாரக் காலத்திலும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள அமைச்சுகள் நிலை பணிக்குழுவும் பல்வேறு அமைச்சுகளும் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நெருக்கடியை சிங்கப்பூர் கடந்துவிடும் என அரசாங்கம் மெத்தனமாக இருக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
நாடாளுமன்றத்தில் ஒரே கட்சிக்கு அதிக பலமும் அதிகாரமும் இருக்கக்கூடாது என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில், தங்களை, தங்களது குடும்பங்களை, வாழ்வாதாரங்களை, வேலைகளை எந்த எம்.பி.க்கள் நன்றாகக் கவனித்துக்கொள்வர் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, இந்தப் பத்தாண்டு களில் எஞ்சியுள்ள காலத்திற்கான வருவாய், செலவினத் திட்டங்கள் குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதன்மூலமே பொருள், சேவை வரி உயர்வு தேவையா இல்லையா என்பதைப் பொதுமக்கள் மதிப்பிட முடியும் என்று பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதுபற்றிக் கேட்டதற்கு, கடந்த ஈராண்டுகளாக நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கவனித்து வருவோர், மூப்படையும் மக்கள் தொகை, உள்கட்டமைப்பைப் புதுப்பிக்க வேண்டிய தேவை போன்ற நாடு எதிர்கொண்டுள்ள நிதிச் சவால்கள் குறித்து தெளிவாக அறிந்திருக்கலாம் என்றும் திரு சான் பதிலுரைத்தார்.
கடந்த மார்ச் மாதத்திலேயே அரசாங்கம் மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தேர்தல் குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டதா என்றும் அதுதான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்து விட்டதா என்றும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் பால் தம்பையா கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு, எந்த ஒரு வேளையிலும் நம் மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரங்களை தாங்கள் புறக்கணிக்கவில்லை என உளமாரக் கூறுகிறேன் என்று அமைச்சர் சான் பதிலளித்தார்.