பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் பகிர்ந்துகொள்ளும் நடைபாதைகளில் செல்லும் பாதசாரிகள் அவர்களுக்கான பாதையில் நடப்பதுடன், முடிந்தவரை இடது ஓரத்தில், விழிப்புடன் நடக்க வேண்டும்.
அத்தகைய பாதைகளில் நடந்து செல்லும்போது, அவர்களது சுய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கைபேசியைப் பயன்படுத்தாமல், சுற்றுப்புறத்தைப் பற்றிய கவனத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் முதன் முதலாக பாதசாரிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடத்தை விதித் தொகுப்பில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் துடிப்பான நடமாட்ட ஆலோசனைக் குழு முன்வைத்த நடவடிக்கைகளின் அங்கம் இது.
பொதுப் பாதைகளைப் பயன்படுத்துவோருக்கான நடத்தை விதித் தொகுப்பு முன்பு சைக்கிளோட்டிகள், மின்-ஸ்கூட்டர் ஓட்டிகள் ஆகியோர் மீது கவனம் செலுத்தியது.
இந்த மாதம் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நடத்தை விதித் தொகுப்பில், 16 வயதுக்குட்பட்டோர், மின்சார ஸ்கூட்டர்களை பெரியவர்களின் கண்காணிப்பில்லாமல் ஓட்டக்கூடாது, அத்தகைய பாதைகளில் வாகனங்களை ஓட்டும்போது கைபேசிகளைப் பயன்படுத்தக்கூடாது போன்ற விதிகள் இடம்பெற்றிருந்தன.
பாதசாரிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த பழக்கங்கள், ஏற்கெனவே நடப்பில் இருக்கும் துடிப்பான நடமாட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டிகள் ஆகியவற்றுக்கு வலுச் சேர்க்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஆகஸ்ட் 4) குறிப்பிட்டது.