அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தமக்கு எதிராக அந்தப் பதவிக்குப் போட்டியிடப்போகும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனையும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிசையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். “பைடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்புடன் இருக்கப்போவதில்லை. அவரைவிட கமலா ஒரு படி மோசம்,” என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.
கறுப்பினத்தவர்களுக்கு எதிராக சில போலிசார் வன்முறையைக் கையாண்ட சம்பவங்களின் அடிப்படையில் அமெரிக்காவின் இடதுசாரிகள் காவல்துறைக்கு நிதி அளிக்கக்கூடாது எனக் கோருவதைத் திரு டிரம்ப், திரு பைடனுடன் தொடர்புபடுத்தி பேசினார். “ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்காவின் காவல்துறையை நிர்மூலமாக்கும் சட்டங்களை உடனே அறிவிப்பார். இவரைவிட கமலா ஒருபடி மோசமானவராக இருக்கக்கூடும். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர்பக்கம் இருக்கும் இந்தியர்களைவிட என் பக்கத்தில் இருக்கும் இந்தியர்கள் அதிகம்,” என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு டிரம்ப் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக உரையாற்றிய திருவாட்டி ஹாரிஸ், திரு டிரம்ப் தமது பணியைச் சரிவர செய்யவில்லை எனக் குறைகூறினார். பொருளியலையும் கொரோனா கிருமிப்பரவலையும் திரு டிரம்ப் சரியாக நிர்வாகிக்கவில்லை என்று திருவாட்டி ஹாரிஸ், கலிஃபோர்னியாவின் டெலவேர் நகரில் திரு பைடம் மற்றும் தங்கள் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது கூறினார். “முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சீரமைத்த பொருளியல் இவரால் மீண்டும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது,” என்றார் திருவாட்டி ஹாரிஸ்.