எஸ்பிளனேட் டிரைவ், ஃபுல்லர்ட்டன் ரோடு சந்திப்பில் நேற்று காலை 10.30 மணியளவில் சாலை நடுவே ஆபத்தான முறையில் நடந்துகொண்டிருந்த 28 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையற்று நடந்து கொண்டது, அரசாங்க ஊழியர்களுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்தது, தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை உட்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் ஏற்கெனவே தேடப்பட்டு வந்தவர் என்றும் போலிஸ் நேற்று (ஆகஸ்ட் 21) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இலக்கில்லாமல் நடந்துகொண்டிருந்த அவரை போலிசார் நடைபாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவர் ஒத்துழைக்க மறுத்ததுடன் தடுமாற்றத்துடன் காணப்பட்டுள்ளார். போலிசார் உதவப் போனபோது அவர் சத்தமாகப் பேசியதுடன், சைகைகளும் காட்டியபடி தொடர்ந்து சாலை நடுவே நடந்தார்.
அவரின் பாதுகாப்புக்கும் ஏனைய சாலைப் பயன்பாட்டாளர்களின் பாதுகாப்புக்கும் அவரை சாலை ஓரத்துக்கு அழைத்துவர போலிசார் மீண்டும் முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்ததுடன், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். நான்கு போலிசார்களில் ஒருவரை அவர் தாக்கவும் முயன்றார். அப்போது அவரைக் கட்டுப்படுத்த போலிசார் டீசர் துப்பாக்கியை குறைந்த அழுத்தத்துடன் அவர் மீது பயன்படுத்தினர்.
அப்போது சாலையில் விழுந்த அவர், எழுந்து சாலையில் ஓடினார். போலிசார் அவரைத் துரத்திப் பிடித்தனர். முரண்டு பிடித்த அவர் மீது இரண்டாம் முறை டீசரைப் பயன்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் அந்த ஆடவர் இரண்டு போலிஸ் அதிகாரிகளைக் காயப்படுத்தி னார் என்று அந்த போலிஸ அறிக்கை குறிப்பிட்டது.
சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.