கொவிட்-19 கிருமித்தொற்று சூழலுடன் மற்ற சுகாதார அபாயங்களையும் சிங்கப்பூர் எதிர்கொள்ள சுத்திகரிப்புத் தரத்தை உயர்த்த வேண்டும். இது தொடர்பான திருத்தச் சட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.
இத்திருத்தச் சட்டத்தால் சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பொதுச் சுகாதார மீள்திறன் மேலும் வலுவடையும் என்றார். இதனால் தற்போதைய கொவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடி, டெங்கி பரவல் மற்றும் எதிர்காலத்தில் நெருக்குதல் அளிக்கக்கூடிய வேறு பொது சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இந்த வலுப்பெற்ற மீள்திறன் கைகொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வழக்கமாக சுத்தம் செய்யும் பணிகள், கிருமி நீக்கத்திற்கு ஆழமாகச் சுத்தம் செய்யும் பணிகள் ஆகியவற்றை எத்தனை முறை மேற்கொள்ள வேண்டும் போன்றவை இந்தத் திருத்தச் சட்டத்தின்கீழ் குறிப்பிடப்படும் என்று கூறப்பட்டது.
சுற்றுச்சூழல் சுகாதாரக் கட்டுப்பாடுகளும் மேம்படுத்தப்படும். சுத்தம் தொடர்பான தரத்திற்கு ஓர் இடத்தின் உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும். சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பில் இவ்வாண்டு தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டது. அப்போது, கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது.
இனி வரக்கூடிய புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும். அதிகமானோர் வருகையளிக்கும் இடங்களில் விதிமுறைகள் முதலில் அமலாக்கம் காணும். மேலும் பிள்ளை பராமரிப்பு நிலையங்கள் போன்ற எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் இருக்கும் இடங்களிலும் விதிமுறைகள் நடப்புக்குக் கொண்டுவரப்படும் என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
பொதுச் சுகாதார மன்றத்தின் ஒரு மாதகால இயக்கம் தொடர்பிலான மெய்நிகர் நிகழ்வில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார். அனைவரும் பயன்படுத்தக்கூடிய பொது இடங்களை சிங்கப்பூரர்கள் சுத்தமாக வைத்துக்கொள்வதில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே இந்த ‘கீப் கிளீன், சிங்கப்பூர்’ இயக்கத்தின் நோக்கம். அதிலும் தற்போதைய கொவிட்-19 கிருமித்தொற்று சூழலிலும் டெங்கி பரவலிலும் இந்த நோக்கம் மேலும் வலியுறுத்தப்பட வேண்டியதாக மாறியுள்ளது.
இத்துடன் திருவாட்டி ஃபூ, ‘எஸ்ஜி கிளீன்’ தரக் குறியீட்டைப் பெற்ற வர்த்தக இடங்களின் எண்ணிக்கையையும் பகிர்ந்துகொண்டார். இதன்படி குறிப்பிட்ட சுகாதாரத் தரத்தைக் கொண்டிருந்த 22,000க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூரின் பசுமைக்கும் தூய்மைக்கும் இங்குள்ள 59,000 துப்புரவாளர்களே காரணம் என்று கூறி, அவர்களை அத்தியாவசிய ஊழியர்கள் என்றும் முன்கள நாயகர்கள் என்றும் பாராட்டினார் அமைச்சர் ஃபூ. அத்துடன் சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருக்கும் கடமை பொதுமக்களுக்கும் இருக்கிறது என்று அவர் நினைவுறுத்தினார்.