லிட்டில் இந்தியாவில் இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பெரிய அளவிலான தீபாவளிச் சந்தை, மக்கள் கூடும் பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சிகள் எல்லாம் இவ்வாண்டு இடம்பெறாது. பதிலாக, இணையம் வழியான முயற்சிகள் மூலம் கொண்டாட்டக் களையை ஏற்படுத்த முற்படுகிறது லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் சங்கம்.
அக்டோபர் 3ஆம் தேதி தீபாவளி ஒளியூட்டு மெய்நிகர் நிகழ்ச்சியாக நடைபெறும். தொலைக்காட்சியில் ஒளியேறும் இந்நிகழ்ச்சியை துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் சிறப்பிப்பார். கேம்பல் லேன் முதல் ஹேஸ்டிங்ஸ் சாலை வரையிலான கொண்டாட்ட ‘கிராமமும்’ சிராங்கூன் பிளாசா கடைத்தொகுதிக்கு அருகில் நடைபெறும் சந்தையும் இவ்வாண்டு அநேகமாக இடம்பெறாது என சங்கத்தின் தலைவர் திரு ராஜகுமார் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
எனினும், கேம்பல் லேனில் தீபாவளிப் பொருட்களை விற்கும் கடைகள் அமைக்கப்படும். வெளிநாட்டு விற்பனையாளர்கள் வராததால் பலகாரங்கள், துணிமணிகளுக்கான தெரிவுகள் குறைந்தாலும் முக்கியமான பொருட்கள் தடையின்றிக் கிடைக்கும் என்றார் அவர்.
நேரில் கடைகளை அமைக்க இயலாதவர்கள் littleindia.com.sg தளத்தில் அமைக்கப்பட உள்ள ‘இணையச் சந்தை’யில் பங்கேற்கலாம்.
தீபாவளி சமயத்தில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் புரோஜெக்ட் கிப்ட் இவ்வாண்டு இணையம் வழி இயங்கும். கிருமிப்பரவலால் தங்களது வாழ்வாதாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே இதன் நோக்கம், என்று அதன் தலைவர் திரு அன்பரசு தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இந்தியச் சமூகத்தினருக்கு ஏற்கெனவே ஏழு மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ள சிண்டா, கொண்டாட்டக் கால அன்பளிப்புப் பைகளுடன் வேலைவாய்ப்புகள் குறித்த சிறப்பு முயற்சிகளையும் முன்னெடுக்கும் என்றார் அவர்.
இந்திய மரபுடைமை நிலையம் நேரடி நிகழ்ச்சிகளையும் அக்டோபர் 12 முதல் நவம்பர் 14 வரை இணைய நிகழ்ச்சிகளையும் கலந்து வழங்கவுள்ளது அதன் பொது நிர்வாகி பவானி தாஸ் தெரிவித்தார்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான சிறப்புப் பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகளையும் லிஷா, ஜேடி கார்ப்பரேஷனுடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது.
கட்டுப்பாடுகளை வரவேற்ற அலுவலக ஊழியராகப் பணிபுரியும் 61 வயது மனோகரி, இதனால் கொண்டாட்ட உணர்வு குறையும் என்றாலும் நோய்ப் பரவலைத் தடுப்பது முக்கியம் என்று தெரிவித்தார். கிருமிப்பரவலால் கலக்கம் அடைந்திருப்பவர்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டம் புத்துணர்ச்சி ஊட்டும் என்று 60 வயது ஊடகத்துறை பணியாளர் அங்கயற்கன்னி கூறினார்.