உலகத்திலேயே ஆகப் பெரிய சரக்குக் கப்பல் சிங்கப்பூரில் நேற்று நங்கூரமிட்டது. திரவ வடிவிலான இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இந்தக் கப்பலில் உரிய சரக்குகள் ஏற்றப்பட்ட பிறகு மறுநாள் ஐரோப்பாவை நோக்கிச் செல்லும்.
சிஎம்ஏ சீஷிஎம் நிறுவனத்தின் ஷெக்க சாடெ ( Jacques Saade ) என்ற அந்தச் சரக்குக் கப்பல் 400 மீட்டர் நீளமாகவும் 78 மீட்டர் உயரமாகவும் 61 மீட்டர் அகலமாகவும் உள்ளது.
கிருமிப்பரவல் சூழலிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கப்பலின் வருகை, கடல்துறையின் மீட்சித்திறனைப் பிரதிபலிப்பதாக போக்குவரத்து மற்றும் வெளியுறவு அமைச்சுக்கான இரண்டாம் அமைச்சர் சீ ஹோங் டாட் இன்று பாசிர் பாஞ்சாங் கப்பல் முனையத்தில் இதனைப் பார்வையிட்டபோது தெரிவித்தார்.
இருபத்தாறு கப்பல் பணியாளர்கள் இயக்கும் இந்தப் பெரும் கப்பல், ஏழு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்குப் பிறகு கட்டப்பட்டது. இதுவே இக்கப்பலின் முதல் பயணமாகும். செப்டம்பர் 23ஆம் தேதி சீனாவிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், பல்வேறு துறைமுகங்களைத் தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு சிங்கப்பூரை வந்தடைந்தது. வீட்டுப்பொருட்கள், மின்பொருட்கள், இயந்திரங்கள், பாதுகாப்புப் கருவிகள் ஆகிய பொருட்கள் நிறைந்த சரக்குப் பெட்டிகளுடன் இது வட ஐரோப்பாவையும் மத்திய தரை கடலையும் நோக்கிப் புறப்படும்.
தனது 84 நாள் பயணத்தில் இந்தக் கப்பல, உலகிலுள்ள 13 துறைமுகங்களுக்குச் செல்லும்.
2050ஆம் ஆண்டுக்குள் உலகக் கப்பல் துறையின் கரியமிலவாயுவின் வெளியீட்டைக் குறைக்கும் இலக்கை அனைத்துலக கடல்துறை அமைப்பு அடைவதற்கு ‘எல்என்ஜி’ (LNG) எனப்படும் திரவ வடிவிலான இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கைகொடுக்கும் என்று அவர் கூறினார்.