தீபாவளி பண்டிகை உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பிட்ட சில எம்ஆர்டி ரயில்களும் பேருந்துகளும் வண்ணமிகு தீபாவளி அலகாரங்களைக் கொண்டு வலம் வரவுள்ளன.
ஒரு மாத காலத்திற்கு லிட்டில் இந்தியா ரயில் நிலையம், பூன் லே பேருந்து நிலையம் ஆகியவை ‘மயில்’ கருப்பொருள் கொண்ட அலங்காரங்களுடன் காட்சியளிக்கும்.
மொத்தம் நான்கு ரயில்களிலும் 10 பேருந்துச் சேவைகளிலும் இந்த அலங்காரங்கள் இடம்பெறும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நிலப் போக்குவரத்து ஆணையமும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமை சங்கமும் (லிஷா) இணைந்து இம்முயற்சிக்கு ஏற்பாடு செய்து வருகின்றன.
“தீபாவளி பண்டிகை லிட்டில் இந்தியா வட்டாரத்தையும் தாண்டி மற்ற பகுதிகளில் அன்றாடம் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அலங்காரங்களைப் பல சேவைகளில் விரிவுபடுத்தியுள்ளோம்,” என்று தெரிவித்தார் லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமார் சந்திரா.
அலங்காரங்களைப் பாராட்டிய போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், பல இன சிங்கப்பூர் சூழலில் ஒருவர் மற்றொருவரின் பாரம்பரியம், கலாசாரம், விழாக்கள் குறித்து அதிகம் அறிந்திராத பட்சத்தில் அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள முன்வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.