இரு மாத பரிசோதனைகளுக்குப் பிறகு உள்ளூர் சமூகத்திலும் விடுதிகளிலும் தொடர்ந்து கிருமித்தொற்று மிகக் குறைவாக, கட்டுக்குள் இருப்பதையடுத்து, அனைத்து விடுதிகளிலுமிருந்து தகுதியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் இம்மாதம் 31ஆம் தேதி (31 அக்டோபர் 2020) முதல், அவர்களது விடுப்பு நாள்களில் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்ல மனிதவள அமைச்சின் உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாடு (Ace) குழு அனுமதி வழங்கியுள்ளது.
விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது வேலையிடங்களுக்கும் அத்தியாவசிய பணிமுறை போக்குவரவுக்கு மட்டுமே வெளியில் செல்ல முடியும்.
கொவிட்-19லிருந்து விடுபட்டு, நோயெதிர்ப்புத் திறன் கொண்டுள்ளவர்களும் அண்மைய ‘அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனை’யில் (RRT) கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்களும் பொழுதுபோக்கு நிலையங்களுக்குச் செல்லலாம்.
பொழுதுபோக்கு நிலையங்களில் உள்ள உணவு மற்றும் பானக் கடைகள், மினிமார்ட்கள், தொலைத்தொடர்பு கடைகள், முடிதிருத்தகம், பணம் செலுத்தும் சேவைகள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்த முடியும்.
கடும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைக் கடைப்பிடித்து, பொழுதுபோக்கு நிலையங்களில் இடம்பெறும் நடவடிக்கைகளின் தொடர்பில் அவர்களது நண்பர்களையும் சந்திக்கலாம்.
தகுதியுள்ள ஊழியர்கள், ஒவ்வொரு விடுதிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் பொழுதுபோக்கு நிலையத்திற்குச் செல்ல SGWorkPass கைபேசிச் செயலிகளின் மூலம் ‘வெளியேறு அனுமதி’யை ஏழு நாட்களுக்கு முன்பிருந்து பதிவு செய்து கொள்ளலாம்.
ஊழியர்கள் செல்லுபடியாகக்கூடிய ‘வெளியேறு அனுமதி’ வைத்திருக்கிறார்களா என்பதை விடுதி நடத்துநர்களும் பொழுதுபோக்கு நிலையங்களும் சோதனை செய்யும். ஊழியர்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க பொழுதுபோக்கு நிலையங்களில் கூடுதல் நடவடிக்கைகளை நடப்பில் இருக்கும்.
இந்தத் தகவல்களை மனிதவள அமைச்சின் இன்றைய (அக்டோபர் 28) அறிக்கை தெரிவிக்கிறது.