வெளிநாட்டு ஊழியர்களின் வசிப்பிடத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் QBD எனப்படும் விரைந்து கட்டப்படும் விடுதிகளில் 7 கட்டி முடிக்கப்பட்டுள்ளன; இன்னும் அத்தகைய 8 விடுதிகள் அடுத்த ஆண்டு முற்பாதிக்குள் கட்டி முடிக்கப்படும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று (அக்டோபர் 30) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போது இந்த விடுதிகளில் 8,000 படுக்கை இட வசதிகள் உள்ளன. மேலும் 8 விடுதிகள் கட்டி முடிக்கப்படும்போது அங்கு 25,000 படுக்கை இட வசதிகள் இருக்கும்.
தற்போது விடுதிகளில் நெரிசலான சூழலில் ஊழியர்கள் வாழ வேண்டிய நிலை உள்ளது.
தற்போதுள்ள விடுதிகளில் ஊழியர்களின் அடர்த்தியைக் குறைக்க இந்தப் புதிய விடுதிகள் உதவும் என்றார் அமைச்சர்.
கட்டுமானத் திட்டப்பணிகள், கப்பல் கட்டுமானத் துறை, பதனீட்டுத் துறை ஆகியவற்றில் ஊழியர்களின் தேவைகளைப் பொருத்து, இனி கட்டப்படவுள்ள QBD விடுதிகள் பற்றிய திட்டங்கள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிராஞ்சி வேயில் இருக்கும் விரைந்து கட்டப்பட்ட விடுதிகளை அமைச்சர் இன்று பார்வையிட்டார்.
மனிதவளத் துறை இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங்கும் அந்த விடுதிகளைப் பார்வையிட்டார்.
இந்த வெஸ்ட்லைட் கிராஞ்சி வே விடுதியை ஜேடிசி உருவாக்கியுள்ளது. வெஸ்ட்லைட் அக்காமடேஷன் நிறுவனம் அதனை நிர்வகிக்கிறது. அங்கு மொத்தம் 1,300 படுக்கைகள் உள்ளன. விடுதி செப்டம்பர் 21 முதல் செயல்பாட்டைத் தொடங்கிய நிலையில் செப்டம்பர் 30 முதல் அங்கு ஊழியர்கள் குடியேறத் தொடங்கினர்.
ஒவ்வொரு அறையிலும் அதிகபட்சமாக 10 படுக்கைகள், ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 6 சதுரமீட்டர் இடவசதி போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த விடுதிகள் 2 முதல் 3 ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படலாம்.