வெளிநாட்டு ஊழியர்கள் முருகானந்தம், 38, தமது நண்பரும் சக ஊழியருமான 30 வயது விவேக்குடன் பல மாதங்களுக்குப் பிறகு பூன் லேயிலுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு நிலையத்திலுள்ள காப்பிக் கடையில் சோறு, ரசம், கீரை, கறிக்குழம்பு என வயிறார முழுச் சாப்பாடு உண்டனர்.
“கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடுமையாக இருந்தாலும் அவற்றுக்கான காரணத்தை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்.
“சிங்கப்பூர் அரசாங்கத்தின் சிறந்த திட்டமிடுதலுக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று இங்கு கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகப் பணிபுரிந்துள்ள திரு முருகானந்தம் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக தங்களது விடுதிகளில் அடைபட்டிருந்த ஊழியர்களில் சிலருக்கு இன்றைய தினம் ஓரளவு விடுதலையை தந்தது.
கொவிட்-19 நோயாளி எவரும் இல்லாத ஊழியர் தங்கும் விடுதிகளில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கான பொழுது போக்கு நிலையங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கென தற்போது எட்டு பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன.
இவர்கள் இந்த மையங்களுக்குத் தங்களது ஓய்வு நாட்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு மட்டும் அங்கு செல்ல முடியும். இதற்காக ‘எஸ்ஜிஒர்க்பாஸ்’ (SGWorkPass) வழியாக வெளியேறும் அனுமதிக்காக ( ‘எக்சிட் பாஸ்’) விண்ணப்பிக்கவேண்டும். ஏழு நாட்களுக்கு முன்னரே இதற்கு இவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த மையங்களில் கடைகளில் பொருட்களை வாங்குவது, சொந்த ஊருக்குப் பணம் அனுப்புவது, முடி திருத்துவது, வெளி இடத்தில் சாப்பிடுவது போன்றவற்றை இன்று இவர்களால் செய்ய முடிந்தது.
ஆயினும், இந்த நிலையங்களிலிருந்து தொலைவில் உள்ள விடுதிகளில் தங்கும் ஊழியர்களுக்குத் தனியார் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டி உள்ளதால் அனைவராலும் இந்த மையங்களுக்கு நினைத்தபடி செல்ல முடியாது.
இந்தப் புதிய விதிமுறைக்கு முன்பு, வேலை மற்றும் ஒரு சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஊழியர்கள் தங்களது விடுதிகளைவிட்டு வெளியேறலாம் என்று அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
அரசாங்க அனுமதி இருந்தபோதும் தமது வேலையிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் இன்றைய தினத்திற்கு முன்பு தாம் தங்கியிருந்த விடுதியைவிட்டு அறவே வெளியேற முடியவில்லை என்று 32 வயது சுதாகர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“நான் எட்டு மாதங்களுக்கு விடுதியில் அடைபட்டிருந்தது சிறைவாசம் போல இருந்தது. இப்போதுதான் இந்த மையத்திற்கு வந்து நான் வெளியுணவு சாப்பிடுகிறேன், நேரடியாக பொருட்களை வாங்குகிறேன்,” என்று கூறினார்.
இந்த மையத்திற்குச் செல்ல முடிந்ததால் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறிய 32 வயது ரங்கராஜன், திரைப்படங்களைக் காணும் வசதி இருந்தால் மன அழுத்தம் கணிசமாகக் குறையலாம் என நம்புவதாகக் கூறினார்.
அத்துடன் விளையாட்டு வசதி இருந்தால் சிறப்பாக இருந்தாலும் இப்போதைக்கு இந்த வசதிகளை அமைத்துத்தருவது கடினமே எனத் தாம் உணர்வதாக பிரகாஷ், 28, கூறினார்.