கோழியின் செல்லிலிருந்து செயற்கையாக உருவாக்கப்படும் கோழி இறைச்சித் துண்டுகளை சிங்கப்பூர் உணவகங்களில் விரைவில் சுவைக்கலாம். Eat Just எனும் கலிஃபோர்னிய நிறுவனத்தின் உருவாக்கமான இந்த கோழி இறைச்சித் துண்டுகள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளைக் கொன்று இறைச்சி தயாரிப்பதற்குப் பதிலாக விலங்குகளின் செல்லிலிருந்து செயற்கையாக இறைச்சித் துண்டுகள் உருவாக்கப்படும்.
உலகில் வேறெங்கும் இது விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்கை கோழி இறைச்சித் துண்டுகள் சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்படும் என்று Eat Just நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜோஷ் டெட்ரிக் கூறினார்.
அத்தகைய கோழி இறைச்சித் துண்டுகள் எப்போதிலிருந்து விற்பனைக்கு வரும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தொடக்கத்தில் இந்த இறைச்சித் துண்டுகளின் விலை உணவகங்களில் சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
போகப்போக விலை குறையும் என்று திரு ஜோஷ் குறிப்பிட்டார்.
இத்தகைய கோழி இறைச்சித் துண்டுகளை உண்பது பாதுகாப்பானது என அறியப்பட்டுள்ளதால் அவற்றை சிங்கப்பூரில் விற்க அனுமதி அளித்திருப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்தது.
இத்தகைய மாற்றுப் புரத உணவுப் பொருட்களின் உணவு பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் போன்றவற்றின் தொடர்பில் அறிவியல்பூர்வமாகவும் நிபுணர்களுடன் ஆலோசனை செய்வதன் மூலமும் ஆராயப்படும் என சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
மூலப்பொருள்களின் நச்சுத் தன்மை, தயாரிப்பு முறை, உணவு விதிமுறைகளின் தரத்தை அந்தப் பொருள் பூர்த்தி செய்கிறதா என்பன போன்றவை ஆராயப்படும் எனவும் அமைப்பு குறிப்பிட்டது.
புதிய ஒழுங்குமுறை விதி பணிச்சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் உணவு அமைப்பு பயன்பாட்டுக்கு அனுமதித்துள்ள முதல் உணவுப்பொருள் Eat Just நிறுவனத்தின் கோழி இறைச்சித் துண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோழி இறைச்சித் துண்டுகள் ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை எனவும் மது வடிப்பான்கள் போன்ற பெரிய ‘பயோரியாக்டர்’களில் தயாரிக்கப்படுவதாகவும் திரு டெட்ரிக் விவரித்தார்.
விலங்குகளின் சில செல்களை எடுத்து, அவற்றுடன் சத்துப்பொருள்களைக் கலந்து இந்த செயற்கை கோழி இறைச்சி தயாரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக சுத்தமான, ஆன்டிபயாட்டிக் இல்லாத, இ-கோலி, சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் போன்ற விரும்பத்தகாதவை இல்லாத இறைச்சி கிடைக்கிறது என ‘தி குட் ஃபூட் இன்ஸ்டிடியூட் ஆசியா பசிபிக்’ எனப்படும் அனைத்துலக, லாபநோக்கற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி எலைன் சியூ கூறினார். மாற்றுப் புரத பயன்பாட்டை இந்த அமைப்பு ஊக்குவிக்கிறது.