சாங்கி எம்ஆர்டி பணிமனைக்குப் பின்னால் இருக்கும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் கட்டுமானத் தளத்தில் நேற்று (டிசம்பர் 15) காலை நிகழ்ந்த வேலையிட விபத்தில் 29 வயது ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்.
கடந்த இரு வாரங்களுக்குள் 5 வேலையிட மரணங்கள் நிகழ்ந்ததையடுத்து, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு தொழிலாளர் இயக்கம் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சாங்கி எம்ஆர்டி பணிமனை இருக்கக்கூடிய கோ செக் லிம் ரோட்டில் உள்ள கட்டுமானத் தளத்தில் நேற்றைய விபத்து நிகழ்ந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. சம்பவம் குறித்து நேற்று காலை 9.58 மணிக்கு போலிசுக்குத் தகவல் கிடைத்தது.
‘வெல்டிங்’ இணைப்பு உடைந்ததையடுத்து, அடுக்கிவைக்கப்பட்டிருந்த தகடுகளின் ஒரு பகுதி ஊழியரின் மீது விழுந்தது. பங்ளாதேஷை சேர்ந்த அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது,” என நிலப்போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
கட்டுமானத் தளங்களில் பயன்படுத்தப்படும் தகடுகள் பொதுவாக இரும்பு, மரம் அல்லது கான்கிரீட்டால் ஆனவையாக இருக்கும். அவை தற்காலிக அல்லது நிரந்தர கட்டமைப்புகளாக இருக்கும்.
விசாரணைகளில் உதவி வருவதாகக் குறிப்பிட்ட ஆணையம், தொடர்புடைய கட்டுமான ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு உதவுவதாகத் தெரிவித்தது.
தானா மேரா எம்ஆர்டி நிலையத்தில் ஒரு புதிய நடைமேடை அமைப்பது, கிழக்கு - மேற்கு ரயில் தடத்தை சாங்கியில் உள்ள புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனையுடன் இணைப்பது ஆகியவற்றைச் செய்து முடிப்பதற்காக லம் சாங் கட்டுமான நிறுவனத்திற்கு $325 மில்லியன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு இந்த பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.