கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று உச்சக்கட்டத்தை எட்டியதால் தீவிர கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உடனடியாக அமலாக்கப்பட்டன.
சுமார் 300,000 ஊழியர்கள் தனிமையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.
தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் தங்கும் விடுதிகளில் வழக்கநிலை திரும்புகிறது.
கடந்த சில வாரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதி நடத்துநர்கள், சமூக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதி கேட்டு மனிதவள அமைச்சிடம் விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து 120க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூக நடவடிக்கைகளில் 30க்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் பாதுகாப்பு இடை வெளியை ஊழியர்கள் உறுதிப் படுத்துவது அவசியம் என்று மனிதவள அமைச்சின் உறுதிப்பாடு, பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக் குழுவின் வட்டார தளபத்திய தளபதி டான் ஃபாங் குன் தெரிவித்தார்.
சில தங்கும் விடுதிகளில் உடற்பயிற்சி போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி அறையில் திரைப்படங்களைப் பார்க்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தங்கும் விடுதி நடத்துநர்கள் அனுமதித்தால் சமைத்துச் சாப்பிடவும் முடியும்.
பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கும் அத்தியாவசியப் பணிகளுக்கும் வெளியே செல்ல அனு மதிக்கப்பட்டாலும் மற்ற நேரங்களில் தங்கும் விடுதிகளிலேயே தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு நாட்களில் குறிப்பிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்ல விரும்பினால் அதற்கு ஊழியர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தானா மேரா கோஸ்ட் ரோட்டில் உள்ள சாங்கி லாட்ஜ் 2ல் கைப்பந்தாட்டத் திடல், விளையாட்டு அறைகள் உள்ளிட்ட சமூக நடவடிக்கைகளில் ஊழியர்கள் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாடியிலும் இடம்பெற்றுள்ள சமையல் அறையையும் குறிப்பிட்ட நேரத்தில் ஊழியர்கள் பயன்படுத்த முடியும்.
தற்போதைய ஏற்பாட்டில் சில மணி நேரங்களில் ஊழியர்கள் சமையலை முடிக்க வேண்டும். இதற்கு முன்பு இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை.
சாங்கி லாட்ஜ் 2ஐ நடத்தும் ‘S11 டொர்மிடோரிஸ்’ நிர்வாக இயக்குநரான ஜோனத்தன் சியா, சிங்கப்பூரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் ஊழியர்கள் மகிழ்ச்சியோடு ஈடுபடும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றார். ஆனால் கவனமாக இவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்.
புதிய தளர்வுகளை தங்கும் விடுதிவாசிகள் வரவேற்றுள்ளனர்.