மனித வாழ்க்கையில் இயற்கை மிக வலியது என்பதற்கு கொவிட்-19 தொற்று சிறந்த எடுத்துக்காட்டு என்பதை இயற்கையுடன் இயைந்த பொங்கல் திருநாள் தமக்கு நினைவூட்டுவதாகக் கூறினார் ஓய்வுபெற்ற அஞ்சல்துறை அதிகாரி திரு சோமசுந்தரம் ராமலிங்கம், 71.
இருப்பினும், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் நல்ல பலனளித்து இருப்பதால் மூன்றாம் கட்டத் தளர்விற்குப் பொங்கல் திருநாளைக் கொண்டாட முடிவதை எண்ணி திரு ராமலிங்கம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் கதை மூலம் இயற்கைமீது தமிழர்களுக்கு இருக்கும் வலுவான பிணைப்பு புலப்படுகிறது. அந்த உறவைப் பொங்கல் திருநாள் காட்டுகிறது,” என்றார் இவர்.
கடந்த தீபாவளியைப் போலன்றி, இம்முறை எட்டுப் பேர் வரை கூடிக் கொண்டாட முடிவதில் இவரின் மனைவி 61 வயது வாசுகிக்கும் மகிழ்ச்சி.
பரபரப்பான வாழ்வில் நன்றி உணர்வைக் கொண்டாடுவதால் பொங்கல் திருநாள் எக்காலத்திற்கும் உகந்தது என்றார் திரு ராமலிங்கத்தின் மகன் பிரகாசம், 41. இயந்திரவியல் நிர்வாகியான இவர், பொங்கல் கொண்டாட்ட ஏற்பாடுகள் எப்போதும் தமக்கு உற்சாகமளிப்பதாகச் சொன்னார்.
“பிள்ளைகளிடம் நமது பண்பாட்டு விழுமியங்களை எடுத்துஉரைக்க பொங்கல் போன்ற திருநாள்கள் ஏற்றவை,” என்றார் பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியும் திரு பிரகாசத்தின் மனைவி உஷாநந்தினி, 35.
பொங்கல் கொண்டாட்டத்தின் போது அம்மாவுக்கு உதவி செய்வதும் பொங்கலோ பொங்கல் எனக் கூவுவதும் தனக்குப் பிடிக்கும் என்றார் ஆறு வயது ராகவ்.