அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே, முந்தைய அதிபர் எவரும் செய்யாத ஒன்றாக, 15 நிர்வாக ஆணைகளிலும் இரு அதிபர் குறிப்புகளிலும் கையெழுத்திட்டார் ஜோ பைடன்.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் விதமாக முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குதல், பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலும் உலக சுகாதார நிறுவனத்திலும் மீண்டும் இணைதல், குறிப்பிட்ட சில முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவதற்கான தடை நீக்கம், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி நிறுத்தம், முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த குடியேற்றக் கொள்கைகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை அந்த நிர்வாக ஆணைகளில் முக்கியமானவை.
“நாடு இப்போதுள்ள நிலையில், வீணாக்குவதற்கு நேரம் இல்லை. நான் கையெழுத்திட்டுள்ள சில நிர்வாக ஆணைகள், கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் நமது வழிமுறையை மாற்ற உதவும். இதற்கு முன்னில்லாத வகையில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வோம். இது தொடக்கம்தான்,” என்று செய்தியாளர்களிடம் அதிபர் பைடன் சொன்னார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக அமெரிக்கா-கனடா இடையிலான கீஸ்டோன் எண்ணெய்க் குழாய் பதிப்புக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது.
உரிய ஆவணமின்றி, நீண்டகாலமாக அமெரிக்காவில் வாழும் குடியேறிகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் விதமாக குடியேற்றச் சீர்திருத்த மசோதாவை பைடன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே, பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் அமெரிக்கா மீண்டும் இணையவிருப்பதை சிங்கப்பூர் வரவேற்றுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப்பும் பிரதமர் லீ சியன் லூங்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளனர்.
“தங்களது பல்லாண்டு கால பொதுத் துறை அனுபவம் இந்த நெருக்கடியான சூழலில் அமெரிக்காவிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் கைகொடுக்கும்,” என்று திருவாட்டி ஹலிமா கூறி இருக்கிறார்.
“கொவிட்-19 பரவலில் இருந்து கூட்டாக மீள்வதிலும் அதற்குப் பிந்திய உலகை வடிவமைப்பதிலும் வலுவான அமெரிக்கத் தலைமைத்துவம் உறுதியான வேறுபாட்டை ஏற்படுத்தும்,” என்று பிரதமர் லீ தமது வாழ்த்து மடலில் குறிப்பிட்டு இருக்கிறார்.