கொரோனா கிருமிப் பரவல் சிங்கப்பூரின் பாரம்பரியச் சிறப்பு மிக்க சமய விழாவான தைப்பூசத் திருவிழாவையும் பாதித்துவிட்டது. சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறையாக காவடிகள், ஊர்வலமின்றி, தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.
கொவிட்-19 சூழலிலும் 150 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட தைப்பூசத் திருவிழாவை சிங்கப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து நடத்த ஏற்பாட்டாளர்கள் பலவித முயற்சிகளை எடுத்துள்ளனர்.
பக்தர்களின் வழிபாடு தொடர தேவையான வசதிகளைச் செய்யும் அதேநேரத்தில், கொரோனா கிருமி பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் கவனத்துடன் மேற்கொண்டு விழா ஏற்பாடுகளைச் செய்து வருவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
டேங் ரோடு, அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இந்த ஆண்டு நடைபெறும். எந்த ஒரு நேரத்திலும் கோயிலுக்குள் மொத்தம் 250 பக்தர்கள் மட்டுமே இருக்கமுடியும்.
28ஆம் தேதி அதிகாலை 12 மணி அளவில் தொடங்கும் தைப்பூசத் திருவிழா இரவு 10 மணி அளவில் நிறைவடையும்.
பால் குடம் எடுப்பதற்கும் கோயிலில் வழிபாடு செய்வதற்கும் மட்டுமே இவ்வாண்டு அனுமதிக்கப்படுகிறது.
அத்துடன், பால் குடம் எடுப்பவர்கள், வழிபாடு மட்டும் செய்யப்போகிறவர்கள் என இரு தரப்பினருக்கும் தனித்தனிப் பாதைகள் இருக்கும். இரு தரப்பினரும் பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்ய தடையரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பால் குடம் எடுக்கும் பக்தர்கள் ரிவர் வேலி ரோடு வாசல் மூலமாகவும் மற்ற பக்தர்கள் டேங் ரோடு வாசல் மூலமாகவும் கோயிலுக்குள் நுழைய வேண்டும். வழிபாடுகளை முடித்து அனைத்து பக்தர்களும் கிளமென்சியூ அவென்யு வழியாக வெளியேறுவார்கள். தைப்பூச நாளன்று கோயிலிலும் சுற்று வட்டாரத்திலும் பக்தர்களுக்கு வழிகாட்ட குறிப்புகள் இடம் பெற்றிருக்கும்.
பால்குடம் எடுக்க முன்பதிவு செய்தவர்களுக்கு அதனை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கும் அதனைக் காட்டிய பிறகே அவர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவருக்கு மட்டுமே அனுமதி.
அனைத்து பக்தர்களும் முன்பதிவு செய்த பின்னரே கோயிலுக்கு வர நிர்வாகம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டது. சாமி தரிசனத்துக்காக கோயிலுக்குச் செல்ல விரும்புவோரும் முன்பதிவு செய்ய வேண்டும்.
முடி காணிக்கை செலுத்துவது நாளையுடன் நிறைவடைகிறது.
நிகழ்வு நாளில் முன்பதிவு செய்யாமல் சுவாமி தரிசனம் செய்ய வந்தால் கூட்ட சூழ்நிலையைப் பொறுத்து அந்த பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அப்படி வரும் பக்தர்கள் கூட்டம் குறையும் வரை காத்திருக்க வேண்டி இருக்கும் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
“எப்போதும் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் 5 பேருக்கு மேல் கோயிலில் எந்த இடத்திலும் கூடக்கூடாது. உள்ளே வந்து நேர்த்திக் கடன்களைச் செலுத்தியதும் உடனடியாக கோயிலை விட்டு வெளியே செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,” என்று வலியுறுத்தி கூறினார் செட்டியார் கோயில் குழுமத்தின் தலைவர் திரு வீரப்பா விஸ்வநாதன்.
அலகு குத்தி வரும் எந்த பக்தருக்கும் கோயிலுக்குள் அனுமதி இல்லை என்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி தைப்பூசத் திருவிழாவை சுமூகமாக நடத்த மக்களின் ஒத்துழைப்பு முக்கியம் என்றும் திரு விஸ்வநாதன்குறிப்பிட்டார்.