புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைப் பகுதிகளில் போராடி வரும் இந்திய விவசாயிகள், இன்று தலைநகர் புதுடெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர்.
குடியரசு நாள் அணிவகுப்பு இடம்பெற்றதை அடுத்து, நண்பகல் 12 மணிக்குப் பிறகே டிராக்டர் பேரணிக்கு போலிஸ் அனுமதி வழங்கி இருந்தது.
ஆனால், காலை 8 மணிக்கே எல்லைப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் திரண்ட விவசாயிகள், போலிஸ் அமைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லி நகருக்குள் புகுந்தனர்.
இதையடுத்து, அவர்களைத் தடுக்க முயன்றபோது போலிசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போலிசார் அவர்களைக் கலைக்க முயன்றனர்.
சில பகுதிகளில் கற்களை வீசித் தாக்கியதில் அரசுப் பேருந்துகளும் போலிஸ் வாகனங்களும் சேதமடைந்தன. டிராக்டர்களுடன் செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள், அதன் உச்சியில் கொடியையும் ஏற்றினர்.
விவசாயிகள்-போலிசார் இடையிலான மோதலால் டெல்லி வன்முறைக் களமாகக் காட்சியளித்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் பத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.
சிங்கு, திக்ரி, காசிப்பூர், முகர்பா சௌக், நாங்லோய் ஆகிய எல்லைகளிலும் அதையொட்டிய பகுதிகளிலும் இணையச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
டெல்லி ஐடிஒ பகுதிக்கு அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நவநீத் சிங் என்ற விவசாயி இறந்துவிட்டதாக போலிஸ் தெரிவித்தது.
ஆனால், அவர் டெல்லி போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போராடிய விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
பேரணியின்போது இடம்பெற்ற வன்முறை நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்த விவசாயச் சங்கங்கள், தீங்கு விளைவிக்கும் நோக்குடன் சமூக விரோதிகளும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரும் பேரணிக்குள் ஊடுருவிவிட்டதாகத் தெரிவித்தன.