சுதந்திர சிங்கப்பூரின் முதல் ஆசிய தலைமை அஞ்சலக அதிகாரியாகப் பணியாற்றிய 'போஸ்ட் மாஸ்டர் பாலா' என்றழைக்கப்படும் திரு எம். பாலசுப்பிரமணியம் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 103.
இன்று மாலை 5.30 மணியளவில் வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக அவரது குடும்ப நண்பர் ஜோதி தெரிவித்தார்.
மனைவி சுமித்ரா, மகள் அனிதா, மருமகன், இரு பேத்திகளை அவர் விட்டுச் சென்றார்.
அஞ்சலக ஊழியருக்கான தொழிற்சங்கக் காங்கிரசின் பொதுச் செயலாளராக 1947ல் பொறுப்பேற்ற திரு பாலசுப்பிரமணியம் முன்னோடி சமூகத் தொண்டர்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த திரு பாலா, தொடக்கக்கால சிங்கப்பூரில் ஏழ்மையில் வளர்ந்தவர். இன, சமூக ரீதியான பாகுபாடுகளைப் பார்த்து வளர்ந்தவர். தாம் உயர்வதோடு, தமது சமூகமும் உயரவேண்டும், நிலையான வாழ்வு பெறவேண்டும் என்ற எண்ணம்கொண்ட அவரது சமூகப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
ஏற்றத்தாழ்வுகள், வெற்றி, தோல்விகள் அனைத்துமே சமமானவை என்று உணர்ந்த சமத்துவவாதியாக வாழ்ந்த அவர், சிங்கப்பூரின் முன்னுதாரண முன்னோடிகளில் ஒருவர்.
திரு பாலா, காற்பந்து விளையாட்டிலும் ஈடுபாடுள்ளவர். 1964ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் திரு பாலா.
இந்திய சமூகம் முன்னேறவேண்டும் என்ற வேட்கை அவரிடம் இறுதிவரையில் இருந்தது.

கல்வி ஒன்றுதான் ஒரு சமூகத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பியவர் இவர்.
தமிழவேள் கோ.சாரங்கபாணி 1951ஆம் ஆண்டில் தொடங்கிய தமிழர் பிரதிநித்துவ சபையை, இவரது நெருங்கிய நண்பரும் தொழிற்சங்கவாதியுமான திரு ஜி.கந்தசாமி 1980களில் தமிழர் பேரவையாக மறுசீரமைத்தபோது அதில் இவரும் பங்காற்றினார்.
சிங்கப்பூரில் தனித்தனித் தீவுகளாக இருந்த பல இந்திய அமைப்புகளை ஒன்று இணைத்து இந்திய சமூகத்தின் சமூக, கலாசாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் வசதி குறைந்த மாணவர்களுக்குத் தீவின் பல்வேறு பகுதிகளில் இலவசத் துணைப்பாட வகுப்புகளையும் இந்தப் பேரவை நடத்தி வந்தது.
இந்த அமைப்பு உட்பட 1960களின் தொடக்கத்தில் திரு ஜி. கந்தசாமி தொடங்கிய சிங்கப்பூர் இந்திய கல்வி அறக்கட்டளையிலும் இணைந்து முக்கிய பங்காற்றினார் திரு பாலா.
ஆங்கில இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்ட திரு பாலா, தன் வாழ்நாள் முழுவதும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டிருந்தார்.