சிங்கப்பூர் இவ்வாண்டு தொடக்கத்தில் கொவிட்-19 தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் தொடங்கியதில் இருந்து 250,000 பேர் தங்களது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் (படம்) தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி தடுப்பூசி விநியோகம் நடைபெற்றால் எல்லாருக்கும் அதனைச் செலுத்த முடியும் என்றும் கூறிய பிரதமர், பொதுமக்கள் தங்களுக்கான முறை வரும்போது தங்களையும் தங்களது அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருமாறு கேட்டுக்கொண்டார்.
“கொவிட்-19 தொற்றிலிருந்து நமது குடும்பங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பே நம் எல்லாரிடமும் இருக்கிறது,” என்று பிரதமர் லீ தமது சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“எந்தவோர் ஆண்டும் இல்லாத வகையில் இவ்வாண்டு கொவிட்-19 சூழலில் நமது குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவிப்பது முக்கியம். நமது குடும்பங்கள் நமக்கு அளித்து வரும் அரவணைப்பு, ஆறுதல் மற்றும் ஆதரவு போன்றவை மோசமான கொவிட்-19 நிலையிலிருந்து மீண்டுவர நமக்கு வலுவை அளித்துள்ளன,” என்றார் பிரதமர்.
கடுமையான கிருமிப் பரவலைச் சந்தித்து வரும் நாடுகள், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி இருக்கும் எச்சரிக்கைப் போக்கைச் சுட்டிய அவர், “கொள்ளைநோய் ஒரு முடிவுக்கு வந்த பின்னர் மகிழ்ச்சி மிகுந்த கொண்டாட்டங்களை நாம் எதிர்பார்க்கலாம். போதுமான அளவுக்கு தடுப்பூசியைக் போட்டுக்கொண்டால் தடுப்பாற்றல் நிறைந்தவர்களாக நாம் மாறுவோம். ஆயினும் நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்பதால் பாதுகாப்பு இடைவெளி விதிமுறை பின்பற்றப்படுவதை தயவுசெய்து தொடருங்கள். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் இதனைத் தொடர்ந்து கடைப்பிடியுங்கள்,” என்றார் திரு லீ.
நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளின்படி பொதுமக்கள் தங்களது வீட்டில் நாள் ஒன்றுக்கு எட்டுப் பேரை மட்டுமே வரவேற்கலாம். அதேபோல உறவினர்களைக் காண வெளியில் செல்வோர் நாள் ஒன்றுக்கு இரு வீடுகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். இந்த விதிமுறை ஏதோ ஒரு வகையில் கொண்டாட்ட சூழலை மட்டுப்படுத்தும் என்பதையும் குறிப்பாக பெரிய குடும்பங்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும் என்பதையும் ஒப்புக்கொண்ட திரு லீ, “உலகம் முழுவதும் கிருமிப் பரவல் வேகம் நீடிப்பதால் இத்தகைய கட்டுப்பாடுகள் அவசியமானவை,” என்றார்.
ஆண்டிறுதிக் கொண்டாட்டங்களின்போது பலர் ஒன்றுகூடியதாலும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தவறியதாலும் ஜனவரி மாதத்தில் பெரும்பாலான நாடுகளில் புதிய கிருமிப் பரவல் அலை உருவானதை அவர் எடுத்துரைத்தார்.“நாம் கற்றுக்கொண்டு தவிர்க்க வேண்டியவற்றில் சில இவை. வேறு வழியின்றி அரசாங்கம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். நமது அன்புக்குரியவர்களை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கைப் போக்கு அவசியமானது.
“எனவே, ரீயூனியன் நிகழ்வையும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதையும் மாற்று வழிகளில், அதாவது காணொளி அழைப்புகள் வழியாகவோ இணையச் சந்திப்புகள் வழியாகவோ நிறைவேற்றிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
இந்த கொள்ளைநோய் பரவல் காலத்தில் சிங்கப்பூரர்களைப் பாதுகாப்பது, குறிப்பாக முதியோர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமை என்றும் அவர் கூறினார்.