கிராஞ்சி வனப்பகுதியில் தவறுதலாக அழிக்கப்பட்ட பகுதியில் இந்தத் தவறு எப்படி நடந்தது என்ற விசாரணை முழுமையடையும் வரை அங்கு அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஒரு ஆய்வு முடிவதற்கு முன் அங்குள்ள பசுமைப் பரப்பு அழிக்கப்பட்டது தொடர்பாக அரசு அமைப்புகளின் செயல்பாடு, அந்தந்த அமைப்புகளுக்கு உள்ளும் அவை மற்ற அமைப்புகளுடன் செயல்படுவது குறித்தும், ஆய்வு நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத், தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
“பொதுச்சேவை இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும்,” என்று கூறிய அமைச்சர் சான், இதில் அரசு அமைப்புகள் அனைத்தும் தங்களுடைய நடைமுறைகளை சரிபார்த்து அவை முறைப்படி செயல்பட்டனவா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி கூறியுள்ளார்.
இதன்மூலம் இதுபோன்ற தவறுகள் இனி நிகழாவண்ணம் பார்த்துக்கொள்ளும்படியும் அவர் சொன்னார்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஜேடிசி கழக தலைமை நிர்வாகி டான் பூன் காய், தேசிய பூங்காக் கழக ஆணையர் டாக்டர் லியோங் சீ சியூ ஆகியோர் கலதுகொண்ட மெய்நிகர் செய்தியாளர் மாநாட்டில் இன்று பேசிய அமைச்சர் சான், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஆய்விற்கு தேசிய பூங்காக் கழக ஆணையர் டாக்டர் லியோங் தலைமை தாங்குவார் என்றும் ஆய்வு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் எடுக்கும் என்றும் திரு சான் சுன் சிங் விளக்கினார்.
“இந்த சம்பவத்தை நாங்கள் கடுமையான கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் இதை மேற்பார்வையிடுவதிலும் குறைபாடுகள் இருந்தது நன்றாகவே தெரிகிறது. இதை சரிசெய்ய வேண்டும்,” என்று அமைச்சர் சான் தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூரில் சுங்கை காடுட்டின் ரயில்வே தடத்தை ஒட்டிய பகுதியின் தாவர வளர்ச்சி மிகுந்த இடம் அழிக்கப்பட்டது சமூக ஊடகங்களில் இம்மாதம் 14ஆம் செய்தி பரவியது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் இரண்டு நாட்களில் ஜேடிசி கழகம் அங்கு உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான ஆய்வு முடிவதற்கு முன் கட்டுமான குத்தகைக்காரர் அதைத் தவறுதலாக டிசம்பர் மாத இறுதியில் அழித்துவிட்டார் என்று கூறியது.
எனினும் அந்த வனப்பகுதியில் அழிப்பு நடவடிக்கை சென்ற ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டதாக துணைக்கோள் படக்காட்சிகள் காட்டின.
இதற்கு மேலும் விளக்கம் அளித்த ஜேடிசி கழகம் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் பிரச்சினைக்குட்பட்ட பகுதி டிசம்பர் மாதம்தான் அழிக்கப்பட்டது என்றும் அதற்கு ஒப்புதல் இல்லை என்றும் தெரிவித்தது.
தற்போதைய நிலையில் அங்குள்ள 25 ஹெக்டர் நிலப்பரப்பில் 11 ஹெக்டர் நிலப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இதில் 4.5 ஹெக்டர் நிலப்பகுதி தவறுதலாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.