சிங்கப்பூரில் முதல் உயர்நிலை உயிர்பாதுகாப்பு கட்டுப்பாடு ஆராய்ச்சிக்கூடம் 2025ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்கிழக்காசியாவில் இத்தகைய ஆராய்ச்சிக்கூடம் திறக்கப்படுவது இதுவே முதல்முறை.
எதிர்காலத்தில் கிருமித்தொற்று அல்லது உயிரியல் மிரட்டல்கள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளத் தயாராவதற்கு இந்த ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் இன்று தெரிவித்தார்.
தேசிய தற்காப்பு ஆய்வு அமைப்பான டிஎஸ்ஓ தேசிய ஆராய்ச்சிக்கூடங்களுக்குச் சொந்தமான இந்தப் புதிய ஆராய்ச்சிக்கூடத்தை மேம்படுத்த ஏறத்தாழ $90 மில்லியன் செலவு செய்யப்படும் என்றார் அவர்.
“பல வளர்ச்சியடைந்த நாடுகள் உயர்தர உயிர்பாதுகாப்பு ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டுள்ளன. 2015ஆம் ஆண்டிலிருந்து சீனா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இத்தகைய ஆராய்ச்சிக்கூடங்கள் இருந்து வருகின்றன. ஆனால் ஆசியான் நாடுகளில் இதுவரை இத்தகைய ஆராய்ச்சிக்கூடம் இல்லை. எனவே, இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்காக தற்காப்பு அமைச்சு $90 மில்லியன் முதலீடு செய்யும். இதன் மூலம் சுகாதார அமைச்சுடன் டிஎஸ்ஓ ஒன்றிணைந்து செயல்பட்டு உயிர்பாதுகாப்பு நிலையை மேம்படுத்தலாம்,” என்று அமைச்சர் இங் கூறினார்.