கடந்த ஐந்து ஆண்டுகளில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் ஏறத்தாழ 1,700 வீடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. மணமுறிவு, பிரிவு போன்ற காரணங்களால் கிட்டத்தட்ட 700 வீடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புள்ளிவிவரங்களை தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் உன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு கான் தியாம் போ கேட்ட கேள்விக்குப் பதிலளிக்க இந்தத் தகவலை திருவாட்டி சிம் வெளியிட்டார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை வாங்கியதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு அவற்றை விற்க முடியாது.
இத்தகைய காலகட்டத்தில் வீட்டின் உரிமையாளர்களிடையே உறவு முறிவு ஏற்பட்டதால் வேறு வழியின்றி அவர்கள் தங்கள் வீடுகளைக் கழகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக திருவாட்டி சிம் கூறினார்.
திரும்ப ஒப்படைக்கப்பட்ட மற்ற வீடுகள் குறைந்த குத்தகைக்காலம் கொண்டவை.
ஸ்டூடியோ வீடுகள், குறைந்த குத்தகைக்காலம் கொண்ட ஈரறை ஃபிளெக்சி வீடுகள், குத்தகைக்காலத்தைப் பணத்திற்கான குறைத்துக்கொள்ளும் திட்டத்தைத் தேர்வு செய்தோரின் வீடுகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
குறைந்தகால குத்தகைக்காலம் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் தொடர்ந்து வசிக்க விரும்பாவிட்டாலோ அல்லது வீட்டில் வசிக்கும் தகுதியை இழந்துவிட்டாலோ வீட்டை அவர்கள் கழகத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என திருவாட்டி சிம் தெரிவித்தார்.
அந்த வீட்டை விற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
திரும்ப ஒப்படைக்கப்பட்ட ஏறத்தாழ 1,700 வீடுகளில் கிட்டத்தட்ட பாதியளவு ஈரறை வீடுகள். ஆறில் ஒரு பகுதி மூவறை வீடுகள், மூன்றில் ஒரு பகுதி நான்கறை அல்லது அதற்கும் பெரிய வீடுகள்.
திரும்ப ஒப்படைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு கழகம் இழப்பீடு தருவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி சிம், அவர்கள் ஒப்படைத்த வீடுகளை எஞ்சியுள்ள வீடுகளுக்கான விற்பனைத் திட்டத்தின்கீழ் கழகம் விற்பதாக தெரிவித்தார்.