பிபிசி செய்தியின் நேர்காணலில் பங்கேற்று கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட அவர், ஆயுதமின்றி போராடும் மக்கள் மீது ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதத்தைப் பயன்படுத்துவது ஏற்க இயலாதது என்றார்.
அரசாங்கம் தங்கள் பக்கம் இல்லை என்று மியன்மார் மக்கள் முடிவெடுத்தால் அதன் பிறகு அந்த அரசாங்கம் மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கும் என்றும் திரு லீ கூறினார்.
தடுத்து வைக்கப்பட்டு உள்ள அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியை விடுவிக்குமாறு ராணுவ அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்த அவர், ஜனநாயகத்துக்கான தேசிய லீக் (என்எல்டி) கட்சி யுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மியன்மாரில் அமைதிச் சூழல் ஏற்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தற்போது மியன்மாரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் நாடளாவிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆங்காங்கே நடத்தப்பட்ட போராட்டத்தில் குறைந்தபட்சம் 21 பேர் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
மியன்மார் ராணுவ ஆட்சி யாளர்கள் உலக அளவிலான கண் டனத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
நிலவரம் குறித்து விவாதிக்க ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று கூட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கூட்டத்தினரைக் கலைக்க உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்த வேண்டாம் என பாதுகாப்புப் படையினருக்கு மியன்மார் ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.
இப்போதைய மியன்மார் நிலவரம் 1988ஆம் ஆண்டுக்கு இழுத்துச் சென்றுவிடக்கூடும் என்றார் பிரதமர் லீ.
அந்த ஆண்டு ராணுவம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியபோது பெரும் ரத்தக்களரி ஏற்பட்டது.
நவம்பர் தேர்தலில் திருவாட்டி ஆங் சான் சூச்சியும் அவரது ‘என்எல்டி’ கட்சியும் வெற்றி பெற்ற பின்னரும் ராணுவம் ஆட்சியைப் பறித்திருப்பது பிற்போக்கான நடவடிக்கை என்றும் இதுபோன்ற செயலுக்கு எதிர்காலம் இல்லை என்றும் திரு லீ கூறினார்.
திருவாட்டி சூச்சியையும் மற்ற தலைவர்களையும் கைது செய்து வாக்கி டாக்கி வாங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்துவதும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மியன்மார் மீது பொருளியல் தடை விதிக்கப்பட்டால் ராணுவ ஆட்சியாளர்களைக் காட்டிலும் மக்களையே அது பெரிதும் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.