வெடிப்பை ஏற்படுத்தக்கூடிய தூசுப் படலத்தைக் கொண்டிருக்கக்கூடிய கிட்டத்தட்ட 500 நிறுவனங்களில் பரிசோதனை தொடங்கியுள்ளதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிப்ரவரி 24ஆம் தேதி துவாஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து மனிதவள அமைச்சுக்குக் கவலையளிப்பதாகச் சொன்ன அவர், தீ ஏற்பட்டதற்கான காரணங்களைத் தீவிரமாக ஆராய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று கூறினார்.
இதுபோன்ற சம்பவம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அக்குழு பரிந்துரைக்கும் என்றார் அவர்.
துவாஸ் தீச்சம்பவம் மூன்று ஊழியர்களின் உயிர்களைப் பறித்தது.
“வேலையிடங்களில் அண்மையில் ஏற்பட்ட விபத்துகள் மனிதவள அமைச்சுக்குக் கவலையளிக்கிறது. ஒவ்வொரு சம்பவத்தையும் அமைச்சு விசாரணை செய்து வருகிறது. உங்களது பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யுமாறு தொழில்துறையில் உள்ள அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது திரு ஸாக்கி கூறினார்.
பொதுத்துறை கட்டுமானக் குத்தகைதாரர்களிடம் பாதுகாப்புச் செயல்திறனை வலியுறுத்தும் கட்டமைப்பு ஒன்றை இவ்வாண்டு பிற்பகுதியில் மனிதவள அமைச்சு வெளியிடும் என்றார் அவர். அதன் மூலம் பாதுகாப்பை முன்னிறுத்தும் நிறுவனங்களே வர்த்தக வாய்ப்புகளை அதிகம் பெறும்.
“கொவிட்-19 சூழலில் எல்லைக் கட்டுப்பாடுகளால் நிறுவனங்கள் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்நோக்குவது எங்களுக்குத் தெரியும். எனினும், ஊழியர்களின் பாதுகாப்பில் நிறுவனங்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது,” என்று திரு ஸாக்கி வலியுறுத்தினார்.
கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து மனிதவள அமைச்சு அமலாக்கப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதை அவர் சுட்டினார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள 510 பரிசோதனைகளில் 486 விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஏழு நிறுவனங்களுக்கு வேலைநிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.