பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் கடந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட மனநல பாடத்திட்டம் இவ்வாண்டு தொழில்நுட்பக் கல்விக்கழகத்திலும் (ஐடிஇ) அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மனநல சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்தும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுகாதார மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடத்திட்டம் மாணவர்கள் முன்கூட்டியே உதவி நாடுவதை நோக்கமாகக் கொண்டது என்று கல்வி துணை அமைச்சர் சுன் சூலிங் கூறினார்.
கல்வி அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், மனநல சுகாதார ஆதரவு உயர் கற்றல் நிலையங்களில் அதிகரித்து வருவதை விளக்கினார்.
குறிப்பாக, தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையின்போதே மனநல சுகாதாரம் பற்றி விவரிப்பதோடு பல்கலைக்கழக அளவிலான திட்டங்கள் வாயிலாக அதனை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நீ சூன் குழுத்தொகுதி உறுப்பினர் கேரி டான், ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் வான் ரிஸால் வான் ஸக்கரியா, ஜூரோங் குழுத்தொகுதி உறுப்பினர் ஷான் ஹுவாங் ஆகியோர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு திருவாட்டி சுன் பதிலளித்தார்.
பள்ளிக்கூடங்கள் மற்ற விவகாரங்களுக்கு இடையில் மாணவர்களின் மனநல சுகாதாரத்திற்கான ஆதரவை எவ்வாறு வழங்க முடியும் என்று திரு ஹுவாங் கேட்டிருந்தார்.
“தோல்வி தொடர்பான பயம் என்பது தொடர் போராட்டம். மாணவர்களுக்கான இப்போதைய சூழ்நிலை இதற்கு முன்னர் இருந்ததைவிட முற்றிலும் மாறுபட்டிருக்கிறது,” என்று குறிப்பிட்ட திரு ஹுவாங், மாணவர்களின் மன
நலம் பற்றியே தாம் பெரிதும் கவலைப்படுவதாகக் கூறினார்.
சக மாணவர்களின் ஆதரவும் நிபுணத்துவ ஆதரவும் மனநல சுகாதாரத்திற்குத் தேவைப்படும் இரு முக்கிய அம்சங்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர் சுன், மாணவர் நலனில் கவனம் செலுத்த இவ்வாண்டு முதல் தனித்துவமான அலுவலர்களை பள்ளிகள் நியமிக்கும் என்று கூறினார்.