கட்டுமானம், கடல்துறை, பதனிடுதல் தொழில்துறை ஆகியவற்றில் புதிதாக சேரும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுக்குப் பிறப்பிக்கப்படும் வீட்டிலேயே இருக்கும் கட்டாய உத்தரவின் பெரும்பாலான பகுதியை விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் நிறைவேற்றலாம் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதியில் இருந்து கொவிட்-19 அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் வேலை அனுமதி அட்டை, எஸ்-பாஸ் ஊழியர்களுக்கு இந்த ஏற்பாடு பொருந்தும்.
ஊழியர்கள் இங்கு வந்தவுடன் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
பரிசோதனை முடிவுகள் வெளிவரும் வரை ஊழியர்கள் நான்கு நாட்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவர்.
கிருமித்தொற்று இல்லை என்று உறுதியான பிறகு, அவர்கள் விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
அங்கு அவர்கள் மீதமுள்ள தனிமைப்படுத்தும் காலத்தைக் கழிப்பர்.
ஏற்கெனவே உள்ள தங்குவிடுதிகளைவிட விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் கூடுதல் வசதிகள் உள்ளன.
விரைவாக கட்டப்பட்ட தங்குவிடுதிகளில் தங்கியவாறு வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களுக்கான கட்டாய அறிமுகத் திட்டத்தில் ஈடுபடலாம் என்றும் ஒரே இடத்தில் இருந்தவாறு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் மனிதவள இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இங்கு கொவிட்-19 கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றார் டாக்டர் டான்.