கொவிட்-19க்கு எதிராக தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம் என்பதை மக்கள் காட்டுவதற்கான வழிமுறைகள் எதிர்காலத்தில் எளிதாக்கப்படவுள்ளன.
தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதை தனிநபர்கள் உள்ளூரில் எவ்வாறு காண்பிக்கலாம் என்பது குறித்த விவரங்கள் தயாரானவுடன் சுகாதார அமைச்சு அவற்றை வெளியிடும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி இன்று (ஏப்ரல் 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத சிங்கப்பூரர்களுக்கு அட்டைகள் அல்லது கடிதங்கள் வழங்கப்படுமா என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி உறுப்பினர் ஜோன் பெரேரா கேட்டதற்கு டாக்டர் ஜனில் இவ்வாறு பதிலளித்தார்.
எல்லைக் கடந்த பயணங்களை அனுமதிப்பதற்காக தடுப்பூசிச் சான்றிதழ்களுக்கு இருதரப்பு அங்கீகாரம் அளிக்கப்படுவதற்கான சாத்தியம் குறித்து ஆராய மற்ற நாடுகளுடன் சேர்ந்து சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் கலந்தாலோசித்து வருவதாக டாக்டர் ஜனிலும் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங்கும் தெரிவித்தனர்.
“கிருமிப் பரவலைத் தடுக்க பொதுச் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பாவதவர்களையும் மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்களையும் இந்த நடவடிக்கைகள் வேறுபடுத்தாது,” என்று டாக்டர் ஜனில் விளக்கினார்.
“மருத்துவக் காரணங்களுக்காக தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்களுக்காக எதிர்காலத்தில் மற்ற தடுப்பூசிகள் கிடைக்கலாம். அறிவியல் சார்ந்த தகவல்களை நாங்கள் மதிப்பீடு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தகுதிக்கூறுகளை நாங்கள் தொடர்ந்து மறுஆய்வு செய்வோம்,” என்றும் அவர் கூறினார்.
வர்த்தக, கருணை, பொழுதுபோக்குக் காரணங்களுக்காக பயணங்களை அனுமதிக்க தடுப்பூசிச் சான்றிதழ் முறையை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் சிங்கப்பூர் திரும்பியவுடன் தனிமை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது குறித்தும் திருமதி ஃபூ மீ ஹார் (வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி), திருமதி இங் லிங் லிங் (அங் மோ கியோ குழுத்தொகுதி) ஆகியோர் கேட்டனர்.
தடுப்பூச் சான்றிதழுக்கு இருதரப்பு அங்கீகாரம் வழங்குவதில் முன்னேற்றம் அடைய சிறிது காலமெடுக்கும் என்று டாக்டர் ஜனில் பதிலளித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்காக கிருமித்தொற்றுப் பரிசோதனை, வீட்டில் இருக்கும் உத்தரவு உள்ளிட்ட எல்லை நடவடிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவரலாமா என்பதை மதிப்பிட கூடுதலான தகவல் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.