அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் 45 வயதுக்குக் குறைந்தோர், தடுப்பூசி போடுவதற்கு ஜூன் மாதம் முதல் முன்பதிவு செய்யத் தொடங்கலாம் என்று சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 3ஆம் தேதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 1.05 மில்லியன் பேர் குறைந்தது முதல்முறை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் 468,000க்கும் மேற்பட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
சிங்கப்பூரின் தடுப்பூசி திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு இன்று நாடாளுமன்றத்தில் டாக்டர் ஜனில் புதுச்சேரி பதிலளித்துப் பேசினார்.
தற்போதுவரை, 70 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய தகுதி வாய்ந்த முதியோரில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினரும், 60 முதல் 69 வயதுடைய தகுதி வாய்ந்த முதியோரில் 70 விழுக்காட்டினரும் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது தடுப்பூசி போடுவதற்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடுதலாக, 45 முதல் 59 வயதுடைய குடியிருப்பாளர்களில் ஏறக்குறைய பாதி அல்லது கிட்டத்தட்ட 500,000 பேர் தடுப்பூசி போட முன்பதிவு செய்துள்ளனர்.
“வலுவான ஆதரவு எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது,” என்ற அமைச்சர் ஜனில் புதுச்சேரி, தடுப்பூசி போடப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு, தடுப்பூசி போடும் நாளை முன்பதிவு செய்வதற்கான குறுச்செய்தி (எஸ்எம்எஸ்) படிப்படியாக அனுப்படும் எனக்கூறினார்.