ஜூரோங் வட்டாரப் பாதையில் அமையும் மேலும் நான்கு எம்ஆர்டி ரயில் நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடப்புக் காலாண்டில் தொடங்கவுள்ளன.
அந்நான்கு நிலையங்களும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் ஜூரோங் நகராண்மைக் கழக தொழிலகப் பகுதிக்குச் சேவையாற்றும்.
இதன் தொடர்பில் தலா $263 மில்லியன் மதிப்பிலான இரு ஒப்பந்தங்களை நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஏப்ரல் 6) வழங்கியது. நான்கு ரயில் நிலையங்களின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மேம்பாலச் சாலைப் பணிகளை அந்த ஒப்பந்தங்கள் உள்ளடக்கியுள்ளன.
ஜூரோங் வட்டாரப் பாதையின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக அந்நிலையங்கள் அமைய இருக்கின்றன. ஜூரோங் வட்டாரப் பாதையின் மூன்றாம் கட்டப் பணிகள் வரும் 2029ஆம் ஆண்டில் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.