சிங்கப்பூர்-மலேசிய மக்கள் எல்லை கடந்து சென்று வர மே 17 முதல் கருணை அடிப்படையில் இரு நாடுகளும் அனுமதி வழங்க இருக்கின்றன.
இத்தகைய பயண ஏற்பாடு பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இதன்படி, கொவிட்-19 பரிசோதனைகள், தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற நிபந்தனைகளை மக்கள் நிறைவேற்ற வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் ஹிசாமுதீன் ஹுசைன் இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்திருந்தார். அவரும் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் சேர்ந்து நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
உடல்நிலை மோசமாக இருக்கும் உறவினரைப் பார்க்க அல்லது இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கும் மக்களுக்கு இந்தக் கருணை அடிப்படையிலான அனுமதி பொருந்தும் என்று மலேசிய அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளையில், மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் இருந்து வரும் ஆழ்ந்த உறவு காரணமாக இந்த ஏற்பாடு தேவைப்படுகிறது என்று டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் சந்தித்தபோது இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கு இடையில் இரு தரப்பு விமானப் பயண ஏற்பாடு சாத்தியமா என்பது பற்றி விவாதித்தனர்.
எதிர்காலத்தில் எல்லை கடந்து மக்கள் சென்று வர அனுமதிக்கும் வகையில் தடுப்பூசிச் சான்றிதழை பரஸ்பரம் அங்கீகரிப்பது பற்றியும் இருவரும் பேசினர்.
சிங்கப்பூரும் மலேசியாவும் பிறப்பிக்கும் சுகாதாரச் சான்றிதழ்களைத் தொழில்நுட்ப ரீதியில் பரஸ்பரம் சரிபார்க்க ஏதுவாக இரு நாட்டு அமைப்புகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதை இந்த இரண்டு அமைச்சர்களும் வெளியிட்ட கூட்டறிக்கை வரவேற்றது.
கொவிட்-19 சூழலிலும் சிங்கப்பூர், மலேசியா இரு தரப்பு உறவுகளும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வலுவாக இருந்து வருவதாக கூட்டறிக்கையில் அமைச்சர் கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களுடைய எல்லைகளை ஒரு போதும் முற்றிலும் மூடவே இல்லை என்று தெரிவித்த டாக்டர் பாலகிருஷ்ணன், மருந்து, உணவு, இதர பொருட்கள் எல்லை வழியாகச் சென்று வர இன்னமும் அனுமதி வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் குறிப்பாக சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே நிலவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு காரணமாக அத்தகைய அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கருணை அடிப்படையில் மக்களை அனுமதிப்பது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் இடம்பெறுவதற்கும் இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்று இரு நாடுகளுக்கும் தொடர்ந்து சவாலாக இருந்து வந்தாலும் சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து அணுக்கமாகச் சேர்ந்து பாடுபடும்; ஒன்று மற்றொன்றுக்கு ஆதரவு அளிக்கும்; இரு நாட்டு மக்களுக்கு இடைப்பட்ட உறவு பாதுகாக்கப்பட்டு பேணி வளர்க்கப்படும் என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் தெரிவித்தார்.