இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழ்நாட்டில் சென்ற மாதம் நடந்து முடிந்த 16வது சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான பல முடிவுகளை ஏற்படுத்தி தந்துள்ளது.
மாநிலத்தில் 10 ஆண்டு காலம் பதவி வகித்த அதிமுக ஆட்சிக்கு அந்தத் தேர்தலின் மூலம் முடிவு ஏற்பட்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அரியணை ஏறுவதற்கான வாய்ப்பு கிட்டி இருப்பதாக நேற்று இரவு வெளியான முடிவுகள் தெரிவித்தன.
"அரை நூற்றாண்டு காலம் திமுகவுக்குத் தலைமை வகித்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் புதல்வரான ஸ்டாலினும் ஏறத்தாழ 50 ஆண்டு காலம் அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
"அதன் ஒட்டுமொத்த விளைவாக மாநிலத்தின் முதல்வர் பொறுப்பு இப்போது அவருக்குக் கைகூடி வந்திருக்கிறது என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று 75 இடங்களில் காலை 8 மணிக்குத் தொடங்கியது. தொடக்கம் முதலே திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கத் தொடங்கியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று இரவு 9.30 மணி வாக்கில் மொத்தம் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 156 தொகுதிகளில் முன்னணியில் இருந்தது. திமுக மட்டும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைக் கைப்பற்றிவிடும் அறிகுறிகள் தெரிந்தன.
எதிர்த்து மோதிய அதிமுக அணி ஏறத்தாழ 77 இடங்களில் முன்னணி வகித்ததாக நேற்று இரவு தகவல்கள் தெரிவித்தன.
நடந்து முடிந்த தேர்தலில் 62.8 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தனர்.
இந்த சட்டமன்றத் தேர்தல் பல புதுமைகளைக் கண்டது. திராவிட இயக்கத்தின் இமாலயத் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இதுவாகும்.
இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 73 விழுக்காட்டினர் அதாவது 45.78 மில்லியன் பேர் வாக்களித்தனர். அவர்களில் 23.17 மில்லியன் பேர் பெண்கள். 22.6 மில்லியன் பேர் ஆண்கள். தமிழ்நாட்டில் இதுவரை நடந்துள்ள சட்டமன்றத் தேர்தல்களில் 2021 தேர்தல்தான் ஆண்களைவிட மிக அதிகமான பெண்கள் (5.69 லட்சம் பேர்) வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக, திமுக அணிகளுடன் அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை இறக்கியதால் ஐந்துமுனைப் போட்டியும் இருந்தது. என்றாலும் மநீம தலைவர் கமல்ஹாசன் மட்டுமே சட்டமன்றத்திற்குச் செல்வார் என்பதற்கான அறிகுறிகள் நேற்று இரவு இலேசாகத் தெரிந்தன.
கொவிட்-19 கட்டுப்பாடு கள் காரணமாக வாக்கு எண்ணிக்கை தாமதமடைந்ததால் முடிவுகள் தாமதமாகவே வெளிவந்தன.