இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றுக்குத் தொடர்ந்து 12 நாட்களாக நாள்தோறும் 300,000 பேருக்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த நாட்டில் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தொட்டுவிட்டது. 24 மணி நேரத்தில் 3,417 பேர் மாண்டுவிட்டதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 218,959 பேர் மாண்டு இருக்கிறார்கள்.
மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் இல்லை, மாண்டுபோனவர்களின் உடலுக்கு எரியூட்ட முடியவில்லை. சவக்கிடங்குகளில் இடமில்லை என்று நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் அபயக்குரலைக் கேட்கமுடிவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், குறைந்தபட்சம் 11 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பல்வேறு நிலைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகியவற்றுடன் இப்போது ஒடிசாவில் இரண்டுவார கால முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், அசாம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இரவு நேர அல்லது வார முடிவு முடக்கம் நடப்பில் உள்ளது.
நாடளாவிய முழு முடக்கத்தை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு ஆலோசனை கூறி இருக்கிறது.
என்றாலும் பொருளியல் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு நாடளாவிய முடக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு தயங்குகிறது.
இவ்வேளையில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தனது தடுப்பூசிக்கு வேகமாக அனுமதி அளிக்கும்படி கேட்டு இந்திய அரசுடன் பேச்சு நடத்தி வருவதாக ஃபைசர் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.