விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் கொவிட்-19 பரிசோதனை நடத்தும் பணி நேற்றுத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் மாணவர்கள் சோதனை செய்துகொள்வதற்காக காலையில் கல்லூரிக்கு வந்தனர்.
அனைவரும் கல்லூரிச் சீருடையில் இருந்தனர். பிரதான நுழைவு வாயில் வழியாக வந்த மாணவர்கள் பரிசோதனை முடிந்த கையோடு பக்கவாட்டில் இருந்த வாயில் வழியாக வெளியேறினர்.
அந்தக் கல்லூரியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட மாணவர்களிடம் கொவிட்-19 சோதனை நடத்தப்படுகிறது.
அந்த மாணவிக்குப் புதன்கிழமை பின்னேரத்தில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மறுநாள் அவர் மருத்துவரிடம் சென்றார். அதன் பிறகு அவருக்குத் தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்தது. அதையடுத்து கல்லூரியில் கிருமிப் பரவலைத் தடுக்கும் நோக்கத்தோடு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மாணவியுடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட 95 மாணவர்களும் எட்டு ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டதாக கல்வி அமைச்சு சனிக்கிழமையன்று தெரிவித்தது. மாணவி எப்படி கிருமித் தொற்றுக்கு ஆளானார் என்பது தெரியவில்லை.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் நேற்று காலை 11.00 மணியளவில் கல்லூரிக்குச் சென்றபோது வெளியே பெரிய அளவில் வரிசையோ கூட்டமோ காணப்படவில்லை. ஆனால் சில மாணவர்கள் தங்களுடைய நண்பர்களுக்காகக் காத்திருந்தனர்.
கல்லூரி வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் பெற்றோர், பரிசோதனை முடிந்து திரும்பும் பிள்ளைகளுக்காகக் காத்திருந்தனர். பள்ளியின் வரவேற்பு மண்டபத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் சுமுகமாக பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக மாணவர்கள் சிலர் கூறினர்.
முன்னெச்சரிக்கையாக இன்று திங்கட்கிழமைக்குள் மாணவர்கள், ஊழியர்கள், வருகையாளர்கள் உட்பட 2,000 பேருக்கு மேல் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசோதனை முடியும் வரை வீட்டில் இருந்து கற்கும் நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
இதனிடையே, சக மாணவி ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டது சில மாணவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இங்கு தொற்றுச்சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையில் மாணவி ஒருவரும் பாதிக்கப்பட்டிருப்பதால் சில மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.