ஹவ்காங் அவென்யூ 8ல் புளோக்குகள் 501, 507ல் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் அந்த புளோக்குகளுக்குச் சென்றவர்கள் என மொத்தம் 828 பேருக்கு நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில் ஒருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்குத் தொற்று இல்லை என உறுதியானது.
சுகாதார அமைச்சு இன்று (ஜூன் 5) இந்தத் தகவலைத் தெரிவித்தது.
அந்த இரு புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் புளோக் 745 ஈசூன் ஸ்திரீட் 72ல் வசிப்போருக்கும் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை கட்டாய கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த புளோக்குகளில் நடத்தப்பட்ட கழிவுநீர் பரிசோதனையில், கொவிட்-19 பரவியிருக்கக்கூடும் என்ற அடையாளம் தென்பட்டிருப்பதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.