சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரம் மனிதவள அமைச்சு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தங்குவிடுதிகளில் வசிக்கும் ஐந்தில் ஓர் ஊழியர் அல்லது 55,000 ஊழியர்கள் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். மே 31 வரையிலான நிலவரம் இது.
இதர 67,000 ஊழியர்கள் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆறு வாரம் முதல் எட்டு வாரம் வரையிலான கால இடைவெளியில் இவர்கள் தங்களது இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வர் என அந்தப் பேச்சாளர் கூறினார்.
'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள் எழுப்பிய வினாக்
களுக்கு நேற்று அவர் பதிலளித்தார்.
"தங்குவிடுதிகளைச் சேர்ந்த மேலும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கொவிட்-19 நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னரும் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும்," என்றார் அவர்.
சற்று முன்னோக்கிப் பார்க்கையில், மே மாதம் 2ஆம் தேதி நிலவரப்படி 42,000 வெளிநாட்டு ஊழியர்கள் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டனர்.
அப்போது இரண்டாம் மனிதவள அமைச்சராக இருந்த டான் சீ லெங், சிலேத்தார் தடுப்பூசி நிலையத்திற்கு வருகையளித்தபோது இவ்விவரத்தை வெளியிட்டு இருந்தார்.
கொவிட்-19 மீதான நிபுணர் குழுவும் சுகாதார அமைச்சும் அளித்த பரிந்துரைக்கு ஏற்ப இரண்டாவது தடுப்பூசிக்கான கால இடைவெளி ஆறு முதல் எட்டு வாரம் வரை நிர்ணயிக்கப்பட்டது என்று அமைச்சின் பேச்சாளர் நேற்று கூறினார்.
இந்தக் கால இடைவெளி இதற்கு முன்னர் மூன்று வாரம் முதல் நான்கு வாரம் வரை இருந்தது.
மே 19ஆம் தேதி முதல் தடுப்பூசிக்குப் பதிவு செய்தவர்களின் கால இடைவெளி நீட்டிக்கப்படும் என கடந்த மாதம் அதிகாரிகள் அறிவித்தனர்.
சிங்கப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 30 விழுக்காட்டினர் இதுவரை இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். 39 மற்றும் அதற்குக் குறைந்த வயதுடையவர்களுக்கான தடுப்பூசி பதிவு இம்மாதம் நடுப்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் கிருமிப் பரவல் நிலவரம் கடந்த ஆண்டு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் ஆக மோசமான நிலையை எட்டியது. அன்றாடம் நூற்றுக்கணக்கான தொற்றுச் சம்பவங்கள் அவ்விடுதிகளில் பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு ஏப்ரலில் அந்த எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது. பின்னர் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஆகக் குறைந்த எண்ணிக்கை அல்லது பூஜ்யம் என்ற அளவில் தங்குவிடுதிகளில் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.
இதுவரை அவ்விடுதிகளில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 54,500. பாதிக்கப்படாத ஊழியர்
களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பதும் வழக்கமாக நடத்தப்பட்டு வரும் கிருமித்தொற்று பரிசோதனைகளும் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தங்குவிடுதிகளை மீட்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த வழக்கமான பரிசோதனைகளுக்கு இடையில் விரைவுப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுபோன்று அடிக்கடி பலவிதமான பரிசோதனைகள் மேற்கொள்வது புதிய தொற்றையும் அது வேகமாகப் பரவும் சாத்தியத்தையும் அடையாளம் காணப் பெரிதும் உதவும் என்றார் அவர்.