காலம் தாழ்த்தாமல் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மூத்தோரிடம்
பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்தி உள்ளார்.
நிலைமை கைமீறி போவதற்கு முன் மூத்தோர் தடுப்பூசி
போட்டுக்கொள்ள வேண்டும்
என்றார் அவர்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஏறத்தாழ 200,000 மூத்தோர் இன்னும் கொவிட்-19 தடுப்பூசி
போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்தோர் அடிக்கடி வெளியே செல்லாமல் இருந்தாலும் குடும்பத்தார் அல்லது நண்பர்களிடமிருந்து அவர்களுக்கு கொவிட்-19 கிருமி பரவும் அபாயம் இருப்பதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் லீ பதிவிட்டார்.
கொவிட்-19 கிருமித்தொற்று மூத்தோரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
குறிப்பாக, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மூத்தோரின் உடல்நிலைக்கு கொவிட்-19 கிருமித்தொற்று
கூடுதல் சிக்கலை ஏற்படுத்தக்
கூடும் என்று திரு லீ கூறினார்.
"கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து தடுப்பூசி உங்களைப் பாதுகாக்கும். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிலருக்குப் பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆனால் அவை
கடுமையானதல்ல.
"ஓரிரு நாட்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அதிலிருந்து சீக்கிரம் குணமடைந்துவிடுவீர்கள். கொவிட்-19 கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியை உங்கள் உடல் உற்பத்தி செய்வதால் நீங்கள் அவ்வாறு உணர்வீர்கள்," என்று தடுப்பூசி பாதுகாப்புமிக்கது என்பதை உறுதி செய்து காணொளி ஒன்றை அவர் வெளியிட்டார்.
69 வயது திரு லீ, தமது இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசியை கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதிசிங்கப்பூர் பொது மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.
70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கடந்த திங்கட்கிழமையன்று தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள மூத்தோர் முன்பதிவு செய்யத் தேவையில்லை.
அவர்கள் நேரடியாக ஏதேனும் ஒரு பலதுறை மருந்தகம் அல்லது தடுப்பூசி நிலையத்துக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
வீட்டைவிட்டு வெளியே செல்ல சிரமப்படும் மூத்தோருக்கு உதவும் வகையில் நடமாடும் தடுப்பூசிக் குழுக்களை குடியிருப்பு வட்டாரங்களுக்கு சுகாதார அமைச்சு அனுப்பியுள்ளது.
இக்குழுக்கள் தற்போது புக்கிட் மேரா, செங்காங், தெம்பனிஸ், ஈசூன் உட்பட 10 குடியிருப்பு வட்டாரங்களில் செயல்பட்டு வருகின்றன.