தமிழ்நாட்டில் 2.5 மில்லியன் பேர்க்கு மேற்பட்டோரை கொவிட்-19 தொற்றிவிட்ட நிலையில், அம்மாநிலத்தில் 66.2 விழுக்காட்டினர்க்கு, அதாவது மூவரில் இருவர் கொரோனா நோயெதிர்ப்பாற்றலைப் பெற்றிருப்பது ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
மாநிலத்தில் மூன்றாவது முறையாக, இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மொத்தம் 26,610 பேரின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஊனிரியல் ஆய்விற்கு (சீரோ சர்வே) உட்படுத்தப்பட்டன. அதில், 17,624 பேரின் இரத்தத்தில் கொரோனா நோய் எதிர்ப்புப்பொருள் (ஆன்டிபாடி) இருந்தது கண்டறியப்பட்டது.
இத்தகவலை மாநில மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் அண்மையில் தமிழ்நாட்டில் மேற்கொண்ட ஆய்விலும் 69.2 விழுக்காட்டினர்க்கு கொரோனா நோயெதிர்ப்பாற்றல் இருப்பதைக் காட்டியது. இந்திய அளவில் இந்தச் சராசரி 67.6 விழுக்காடாக உள்ளது.
மாவட்டங்களைப் பொறுத்தமட்டில், விருதுநகரில் 84 விழுக்காட்டினரும் சென்னையில் 82 விழுக்காட்டினரும் கொரோனா நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டுள்ளனர். ஆகக் குறைவாக, ஈரோடு மாவட்டத்தில் 37 விழுக்காட்டினரே கொரோனா நோயெதிர்ப்பாற்றலைப் பெற்றுள்ளனர்.
மாநிலம் முழுவதும் கிராமம், புறநகர், நகர்ப்பகுதி என மொத்தம் 888 கிருமித்தொற்றுக் குழுமங்களில் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டன.
நோயெதிர்ப்பாற்றல் அதிகரிப்பிற்கு அதிகாரிகள் இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர்.
"கொரோனா இரண்டாவது அலை மிகக் கடுமையானதாக இருந்தது. நாளொன்றுக்கு 36,000க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொற்று உறுதிசெய்யப்பட்டோருடன், மேலும் பலர் அறிகுறியின்றி பாதிக்கப்பட்டிருக்கலாம்," என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.