கட்டுமானத் துறை ஊழியரான எம்.முத்து, கடந்த 15 மாதங்களாக நோரிஸ் சாலையில் உள்ள தென்னிந்திய உணவகம் ஒன்றில் தமது உறவினர்களோடு சேர்ந்து உணவருந்த முடியவில்லை.
தம்மைப்போன்று சிங்கப்பூரில் பணியாற்றும் தமது உறவினர்களை வாராவாரம் சந்தித்து அவர்களோடு சேர்ந்து உணவருந்தினார் திரு முத்து. ஆனால், அது கொவிட்-19க்கு முந்தைய நிலவரம்.
திரு முத்துவின் மிகப் பெரிய ஏக்கம் என்னவென்றால், தமிழகத்தில் உள்ள தமது மகளைச் சந்திக்க முடியாதது. மகள் யாழினிக்கு அடுத்த மாதம் மூன்று வயதாகிறது.
திருச்சியில் வசிக்கும் தமது குடும்பத்தாரைப் பார்க்க காணொளி தொலைபேசி அழைப்புகளை திரு முத்து சார்ந்துள்ளார்.
“நான் எப்போது வீட்டிற்கு வருவேன் என்று ஒவ்வொரு நாளும் எனது மகள் என்னிடம் கேட்கிறாள்,” என்றார் அவர்.
ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சிங்கப்பூர் வந்த திரு முத்து, 34, செனோக்கோவில் உள்ள தமது விடுதியிலிருந்து சண்டே டைம்ஸ் நாளிதழிடம் பேசினார்.
“இந்தியாவுக்குத் திரும்புவது மிகவும் எளிது. ஆனால், சிங்கப்பூருக்கு திரும்பி வருவது மிகவும் கடினமாகிவிடும் என எனது மனைவி, மகளிடம் கூறுவேன்,” என்ற அவர், கடைசியாக 2019ல் தமது சொந்த ஊருக்குச் சென்றார்.
திரு முத்துவுக்கு ஏழு வயதில் ஒரு மகனும் உள்ளார். ஒவ்வொரு மாதமும் தமது குடும்பத்திற்கு $1,000 அனுப்புகிறார் அவர்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில், விடுதிகளில் கொவிட்-19 தொற்றுப் பரவியதால் கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊழியர்களுக்குத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கட்டுமானத் திட்டங்கள் நின்றுபோயின.
சிறிய கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த திரு முத்துவையும் அவருடன் பணியாற்றும் ஊழியர்களையும் கடந்த ஆண்டு ஜூலையில் கொரோனா கிருமி தொற்றியது. ஆனால் திரு முத்துவிடம் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்படவில்லை. அதையடுத்து அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் வேலையிடத்திற்குத் திரும்பிய திரு முத்து, “நான் வேலைக்குச் சென்றுவிட்டு விடுதிக்குத் திரும்பிவிடுவேன். அவ்வளவுதான்,” என்று கூறினார்.
செம்பவாங், மண்டாய் எஸ்டேட், உட்லண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு இட்டுச்செல்லும் சாலைகள் அமைதியாக காணப்பட்டன. பெரும்பாலானோர் விடுதிகளிலேயே இருந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்தனர்.
பங்ளாதேஷ் நாட்டவரான முபாரக், நண்பர்களையும் உறவினர்களையும் சென்று பார்க்க வெளிநாட்டு ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஓரிரு நாள்கள் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்.
செனோக்கோவில் உள்ள மற்றொரு தங்குவிடுதியில் வசிக்கும் அவர், “நாங்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளோம். இங்கு பணிபுரியும் எனது மூத்த சகோதரரை காண விரும்புகிறேன்,” என்றார்.
“உள்ளூரில் உள்ள அவரை நேரடியாகச் சந்திக்க இயலாமல் கைபேசியில் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது சோகமாகவும் வினோதமாகவும் இருந்தது,” என்றார் முபாரக், 34.
கட்டுமானப் பொறியியல் நிறுவனமான கோரி ஹோல்டிங்ஸ் போன்ற முதலாளிகள், தங்களது ஊழியர்களின் நலனை மேம்படுத்த முயற்சி எடுத்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, அவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களது வேதனைகளைக் கேட்டறிய முதலாளிகள் முற்படுகின்றனர்.
ஊழியர்களிடம் நம்பிக்கையை ஊட்ட கோரி ஹோல்டிங்ஸ் நிறுவனம் சம்பளத்தை உயர்த்தியுள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹுய் யூ கோ, 50, ஊழியர் சம்பளம் 10 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் குறைந்த சம்பள ஊழியர்களுக்கு 30 விழுக்காடு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தும் திரு சல்மான், 50, தமது ஊழியர்களில் 35 பேர் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறினார்.
“ஓய்வு நாள்களில் அவர்கள் வெளியே செல்ல முடியவில்லை. தாயகம் சென்றால் சிங்கப்பூருக்குத் திரும்பிவர முடியாமல் போய்விடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர்,” என்றார் அவர்.
கட்டுப்பாடுகள், நிச்சயமற்றதன்மை ஆகிய காரணங்களால் இந்த மாதம் தமது ஊழியர்களில் ஐவர் பணியிலிருந்து விலகி இந்தியா திரும்பிவிட்டதாக திரு சல்மான் சொன்னார்.
அவரது நிறுவனத்தில் பணிபுரியும் திரு பிக்ரம்ஜித் சிங்கிற்கும் அதே குழப்பம்தான். அவரது வேலை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டிய காலத்தை நெருங்குகிறது.
“பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை எனது நெருங்கிய உறவினர்களில் ஒன்பது பேர் கொவிட்-19 காரணமாக இறந்துவிட்டனர்,” என்றார் திரு சிங், 33.
“எனினும், நான் திருமணம் புரிய பஞ்சாப்பிற்குத் திரும்பினால் அது எனது பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் என்றாலும், இங்கு நான் பெறும் $800 மாதச் சம்பளத்தை தரும் வேலையை அங்கு பெற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவில் வேலைச் சந்தை மோசமாக உள்ளது,” என்றார் அவர்.