புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களிடம் மூன்று விஷயங்கள் பொதுவாகத் தென்பட்டன.
அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, முகக்கவசத்தைச் சரியாக அணியவில்லை, கைகளால் பழங்கள், காய்கறிகளைத் தொட்டனர்.
தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் நடத்திய ஆய்வின் முடிவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.
புக்கிட் மேரா சந்தை தொற்றுக் குழுமத்தில் மொத்தம் 94 பேர் இருந்தனர். அங்குள்ள 182 கடைகளும் இரு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்தன.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, சந்தை மூடப்பட்டதால் பாதிக்கப்பட்ட கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் ஆய்வாளர்கள் பேசி தகவல் சேகரித்தனர்.
இந்தப் பகுதிக்கு மூத்தோர் அடிக்கடி வந்து சென்றதால், இந்தச் சந்தையில் கிருமித்தொற்று நிலவரம் குறித்து ஆய்வாளர்கள் கவனம் செலுத்தியதாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தின் நிர்வாக இயக்குநரான பேராசிரியர் லியோ யீ சின் கூறினார்.