லிட்டில் இந்தியாவில் வாரயிறுதி நாள்களில் ஐந்திலக்க எண்ணில் வருவாய் ஈட்டிய நகைக்கடைக்காரர்கள் தற்போது போதிய வியாபாரமின்றித் தவிக்கின்றனர்.
தீவு முழுவதும் பல இடங்களிலிருந்து பங்ளாதேஷ் ஊழியர்களை ஈர்த்து முன்னதாக துடிப்புடன் காணப்பட்ட சமூக இடம் ஒன்று இப்போது விறுவிறுப்பின்றி காணப்படுகிறது.
கேலாங்கில் ஒரு காலத்தில் வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்த இணையச் சேவை மையங்கள் தற்போது இருண்டு கிடக்கின்றன.
வெளிநாட்டு ஊழியர்களின் படையால் பெரிதும் பலனடைந்த இந்த இடங்கள் களையிழந்துள்ளன. வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.
கொவிட்-19 சூழலுக்கு முன்பிருந்த காலத்துடன் ஒப்புநோக்க, தற்போது லிட்டில் இந்தியாவுக்கு வருவோரின் எண்ணிக்கை 50 விழுக்காடு குறைந்துள்ளது என்று லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) கௌரவச் செயலாளர் ருத்ரபதி, 52, கணிக்கிறார். இதனால், சில கடைக்காரர்களுக்கு 80 விழுக்காடு வரை வருவாய் சரிந்துள்ளதாக அவர் கூறினார்.
சிராங்கூன் சாலையில் உள்ள சத்யா ஜுவல்லரி நகைக்கடைக்கு முன்பு வாரயிறுதிகளில் மட்டும் ஏறக்குறைய $30,000 வருவாய் கிடைத்ததாக அக்கடை இயக்குநர் திரு எம்.ராக்கப்பன் கூறினார். இது, மாத வருவாயில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்காகும். எனினும், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
“நான் இன்னமும் மாத வாடகையும் கடை ஊழியர்களுக்குச் சம்பளமும் கொடுக்க வேண்டியிருக்கிறது,” என்றார் திரு ராக்கப்பன்.
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குத் திரும்ப இயலாத மலேசியர்கள் சிலரின் வருகையை மட்டுமே தாம் சார்ந்திருப்பதாக அவர் சொன்னார்.
பதினெட்டு மாதங்கள் கழித்து, லிட்டில் இந்தியா வர்த்தகங்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இருள் நீங்கி வெளிச்சம் வரப்போகிறது. தங்குவிடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் சமூகத்தில் கலந்துறவாட வகைசெய்யும் முன்னோடித் திட்டம் ஒன்று இவ்வாரம் தொடங்குகிறது.
அதன்படி, விடுதிகளில் வசிக்கும் 500 ஊழியர்கள் வாராவாரம் லிட்டில் இந்தியாவுக்கு வந்துசெல்ல அனுமதிக்கப்படும்.
இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும் ஊழியர்களை வெளியே செல்ல விடுவது வரவேற்கத்தக்கது என்றார் வெளிநாட்டு ஊழியர் நடவடிக்கை நிலையம் ஒன்றின் நிறுவனர் ஏ.கே.எம்.மொஹ்சின்.
“இந்த எண்ணிக்கையை நாம் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். ஊழியர் ஒருவர் வெளியிடத்தில் தொற்றுக்கு ஆளானால் தங்குவிடுதிகளில் தொற்றுப் பரவல் மீண்டும் தலைதூக்கிவிடும்,” என்றார் அவர்.