இந்தியா தன் மக்களுக்குத் தடுப்பூசி போட்டு, கொவிட்-19 கிருமித்தொற்றை ஒடுக்குவதில் உலக சாதனை நிகழ்த்தி வருகிறது.
ஒரே நாளில் கடந்த வெள்ளிக்கிழமை 25 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டன.
அதோடு மட்டுமின்றி, மாதாமாதம் 250 மில்லியனுக்கும் அதிக தடுப்பூசிகளைப் பெறுவது நாட்டின் இலக்கு என்று அரசாங்க தகவல் வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு இந்த மாதம் ஏறத்தாழ 200 மில்லியன் கோவிஷீல்டு தடுப்பூசியும் 35 மில்லியன் கோவேக்சின் தடுப்பூசியும் கிடைக்கும் என்று அந்தத் தகவல் வட்டாரம் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தியா இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒரே நாளில் 14.1 மில்லியன் தடுப்பூசிகளைப் போட்டது.
சீரம் தடுப்பூசி நிறுவனம் சென்ற மாதம் 190 மில்லியன் குப்பி தடுப்பூசி மருந்தை வழங்கியது. இந்த மாதம் 200 மில்லியன் குப்பி தடுப்பூசி மருந்தை அது வழங்கும்.
ஸைடஸ் கெடிலா நிறுவனம் இந்த மாத முடிவில் கொவிட்-19 தடுப்பூசி மருந்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்காது என்று அந்த அரசுத் தரப்பு தெரிவித்தது.
பூஸ்டர் தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, போதிய தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் ஆகையால் பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பது பற்றி இப்போதைக்கு முடிவு எதுவும் இராது என்றும் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
முதலில் தன் மக்களுக்குத் தடுப்பூசியைப் போட்டுவிட்டு பிறகு மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதே இந்தியாவின் முன்னுரிமை என்றும் ஒரு தகவல் வட்டாரம் கூறியது.
இதனிடையே, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி தடுப்பூசி இயக்கம் தொடங்கியது முதல் 800 மில்லியன் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்து இருக்கிறார்.
இவ்வேளையில், இந்தியாவில் தடுப்பூசியில் பெரும் சாதனை படைத்துள்ள கோவா மாநிலத்தின் சுகாதார ஊழியர்கள், அந்த மாநில மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பிறந்தநாளில் 25 மில்லியன் தடுப்பூசி சாதனை படைக்கப்பட்டது தனக்கு மிக பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார்.
இமாச்சலப் பிரதேசம், கோவா, சண்டிகர், லட்சத்தீவுகள் ஆகியவற்றில் 100 விழுக்காட்டினருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதை பிரதமர் மோடி தனது செய்தியில் சுட்டினார்.
நாட்டில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவரும் மும்முரமாக செயல்படுவது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
இதனிடையே, சனிக்கிழமை 24 மணி நேரத்தில் புதிதாக 30,773 பேருக்கு தொற்று உறுதியானதாகவும் 309 பேர் மரணமடைந்ததாகவும் அரசுத் தரப்பு கூறியது.