சிங்கப்பூரில் நாள்தோறும் பதிவாகும் கொவிட்-19 தொற்று எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் 5,000ஐத் தொடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் கொரோனா தொற்றியோரில் பெரும்பாலோர்க்கு, அதாவது 98 விழுக்காட்டினருக்கு இலேசான அறிகுறி காணப்படலாம் அல்லது அறவே அறிகுறிகள் தென்படாதிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமியுடன் வாழ்வதற்கேற்ற அணுகுமுறையை நாடு பின்பற்றத் தொடங்கும் நிலையில், தற்போதைய நிலவரத்தை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் அதிகாரிகள் பெரிய அளவிலான மறுஆய்வை நடத்தியதன் விளைவாக இத்தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான அனைத்துவித நெறிமுறைகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்.
கடுமையாகப் பாதிக்கப்படுவோருக்காக மருத்துவமனை படுக்கைகளை அதிகரிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு அணுக்கக் கண்காணிப்பு தேவைப்படும்.
கடந்த வாரத்தில் கொவிட்-19 சிகிச்சை மையங்களில் 580 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. இதுபோன்ற, ஒன்பது சிகிச்சை மையங்களில் படுக்கைகளின் எண்ணிக்கையை இந்த மாத இறுதிக்குள் 3,700க்கு உயர்த்த சுகாதார அமைச்சு திட்டமிடுகிறது.
இதுதான் சிங்கப்பூருக்கு ஏற்பட்டிருக்கும் ‘மிகப்பெரிய நெருக்கடி’ என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். கொவிட்-19 நிலவரத்தைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழு மெய்நிகர் வழியாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் பல தகவல்களை வெளியிட்டார்.
தற்போது கொவிட்-19 சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், மருத்துவமனைப் பராமரிப்பு தேவைப்படாத பல நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதாகவும் திரு ஓங் தெரிவித்தார்.