புதிதாக ஜூரோங் பகுதியில் எழுப்பப்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் குழப்பநிலை. குறைபாடுகள் உள்ள வசிப்பிடம், கொவிட்-19 தொடர்பில் விரைந்து மருத்துவ உதவி பெறுவதில் வசதியின்மை குறித்து அத்தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜூரோங்கின் 'வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங்' தங்குவிடுதி நிலைமையைக் காட்டும் படங்களும் காணொளிகளும் செவ்வாய்க்கிழமையிலிருந்து பல்வேறு இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தாங்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து ஊழியர்கள் தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நிலைமை முற்றிய நிலையில் நேற்று முன்தினம், தங்குவிடுதி நிர்வாகத்தினரிடம் பேச ஊழியர்கள் ஒன்று திரண்டுவிட்டனர்.
அதன் பிறகு கலகத்தடுப்பு போலிஸ் படை அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
தங்குவிடுதியின் 2,000 ஊழியர்களில் கிட்டத்தட்ட 500 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக 'வீசெட்' செய்தித் தளத்திடம் ஊழியர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், மருத்துவ உதவி பெறுவதில் தங்களுக்குப் போதுமான வசதி செய்து தரப்படவில்லை என்றும் தொற்று கண்டவர்களை முறையாகத் தனிமைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்குவிடுதி அறைகளுக்கு வெளியே நடைபாதைகளில் உறங்குவதாகக் காட்டும் படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மருத்துவ உதவி கிட்டும்வரை அறை நண்பர்களுக்குக் கிருமித்தொற்று பரவாமல் இருக்க, நோயாளிகள் இவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தங்குவிடுதிவாசிகள் திரண்டு தங்களின் வேதனையைக் கூறியதாக அறியப்படுகிறது.
புழுக்கள் உள்ள உணவும் கெட்டுப் போன உணவும் தங்களுக்குத் தரப்படுவதாகவும் சில ஊழியர்கள் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கொவிட்-19 தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஊழியர்களை முறையான வளாகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை மனிதவள அமைச்சு கண்டறிந்ததாகக் குறிப்பிட்டது.
"தங்குவிடுதிகளில் வசிக்கும் எங்கள் வெளிநாட்டு ஊழியர் சகோதரர்களுக்குக் குறித்த நேரத்தில் தகுந்த மருத்துவ உதவி கிடைப்பதை நான் உறுதிசெய்வேன்," என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இதன் தொடர்பில் கூறியுள்ளார்.