கொவிட்-19 தொற்று காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-10-2021) 57 முதல் 89 வயதிற்குட்பட்ட 13 பேர் மாண்டுவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 407ஆக உயர்ந்தது.
நேற்று மாண்டோரில் 11 பேர்க்கு வேறு உடல்நலக் குறைபாடுகள் இருந்தன என்றும் தடுப்பூசி போடாத அல்லது முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்ற இருவர்க்கு வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரியவில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே, சமூகத்தில் 2,745 பேர், வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 414 பேர், வெளிநாட்டில் இருந்து வந்த நால்வர் என புதிதாக 3,163 பேரை கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 198,374ஆக உயர்ந்துவிட்டது.
வாராந்திர கிருமிப் பரவல் உயர்வு விகிதம் 1.14லிருந்து 1.12ஆகக் குறைந்துள்ளது. இவ்விகிதம் ஒன்றுக்குமேல் இருப்பது கொவிட்-19 பாதிப்பு இன்னும் கூடி வருவதைக் காட்டுகிறது.
மருத்துவமனைகளின் பொதுப் பிரிவுகளில் கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருவோரில் 284 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுவதாக அமைச்சு கூறியது.
சீரற்ற உடல்நிலையுடன் கூடிய 69 பேரும் மோசமான உடல்நிலையுடன் 61 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனர்.
இப்போதைக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள 382 படுக்கைகளில் கொரோனா நோயாளிகள் 130 பேர் உட்பட 261 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; 121 படுக்கைகள் காலியாக உள்ளன.