நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததை ரெசா கான் ஒப்புக்கொண்டதை அடுத்து அவரது நடத்தையை ஆராய பாட்டாளிக் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. பாலியல் வன்செயல் தொடர்பிலான ஒரு சம்பவத்தின் தொடர்பில் தாம் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததற்காக நேற்று திருவாட்டி ரெசா மன்னிப்பு கேட்டதை அடுத்து பாட்டாளிக் கட்சி தனது முடிவை அறிவித்தது. ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று, பாலியல் வன்செயல் சம்பவம் ஒன்றை போலிசார் தவறாகக் கையாண்டதாக திருவாட்டி ரெசா குற்றம் சாட்டினார்.
தமது கட்சியினரின் குழுவின் முடிவுக்கும், நாடாளுமன்றத்தின் சலுகைகள் குழுவினரின் முடிவுக்கும் சம்பந்தம் இருக்காது என்று திரு பிரித்தம் கூறினார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவருடன் தாம் காவல் நிலையத்திற்குச் சென்றதாகக் கூறியது பொய் என்பதை திருவாட்டி ரெசா நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஏன் பொய்யுரைத்தார் என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது, பெண்களுக்கான ஆதரவுக்குழு ஒன்றில் தாம் இருந்ததை ஒப்புக்கொள்வதற்குத் தயங்கியதாக திருவாட்டி ரெசா கூறினார். 18 வயதாக இருந்தபோது தாம் பாலியன் வன்செயலுக்கு ஆளானதால் இந்தக் குழுவில் சேர்ந்ததாகக் கூறிய திருவாட்டி ரெசா, அங்கு ஒருவர் பகிர்ந்த ஒரு கதையை சில பொய்களுடன் பகிர்ந்ததாகக் கூறினார்.
திருவாட்டி ரெசா கூறியதன் விவரங்களைத் தெளிவுப்படுத்திய திருவாட்டி இந்திராணி ராஜா, அந்தப் பெண் மூன்று சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்திருப்பதாகத் தெரிவித்தார். நாடாளுமன்றச் சலுகையை திருவாட்டி ரெசா மீறிவிட்டதாகவும் இந்த விவகாரம் நாடாளுமன்ற சலுகைக்குழுவின் பார்வைக்குக் கொண்டுசெல்ல விண்ணப்பித்தாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் ஒப்புதல் அளித்தார்.