வெளிநாட்டு ஊழியர்களுக்கான மனநல ஆதரவு பல முனைகளில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. உதாரணத்துக்கு, ‘ஃபாஸ்ட்’ எனப்படும் நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கும் குழுவின் உறுப்பினர்கள் இதன் தொடர்பில் அடிப்படை மனநல மற்றும் உளவியல் முதலுதவி பயிற்சிக்குச் செல்வார்கள்.
இதுவரை 500 அதிகாரிகள் இந்தப் பயிற்சியை முடித்துவிட்டார்கள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சின் ஃபாஸ்ட் குழுக்களில் இடம்பெற்ற மனிதவள அமைச்சின் அதிகாரிகள் ஊழியர் தங்குவிடுதியில் கொவிட்-19 நிலவரத்தைக் கண்காணிக்க உதவுவார்கள்.அரசு சாரா அமைப்புகளுடன் அமைச்சு இணைந்து பணியாற்றி, ஆலோசனை சேவை அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்வார்கள். மேலும் தங்குவிடுதி நடத்துநர்களுக்கு இணையக் கருத்தரங்கு மூலம் மனநலம் பற்றியும் அதன் விழிப்புணர்வை அதிகரிப்பது பற்றியும் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் விவரித்தார்.
மனநலக் கழகத்துடன் இணைந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருப்போருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்களின் மனநலம் பற்றி ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி உறுப்பினர் எட்வர்ட் சியா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் டான், இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 98 ஒர்க் பெர்மிட் அட்டைதாரர்கள் மனநலக் கழகத்தில் அனுமதிப்பட்டனர் என்றார்.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைவு. ஆனால், 2019ல் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அரசு சாரா அமைப்புகள், தங்குவிடுதி நடத்துநர்கள் தவிர, முதலாளிகள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து கடந்த ஆண்டு நவம்பரில் அமைக்கப்பட்ட புரோஜெக்ட் டோன் பணிக்குழுத் திட்டத்தின் மூலம், வெளிநாட்டு ஊழியர்களின் மனநலத்தை மேம்படுத்த மனிதவள அமைச்சு பணியாற்றி வருகிறது.
ஊழியர்களுக்குள் ஆதரவுத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயற்சியளிப்பதும் திட்டத்தில் அடங்கும். அந்த வகையில் 2022 இறுதிக்குள் 600 ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் தங்கள் தங்குவிடுதியை விட்டு வெளியே செல்ல முடியாத ஊழியர்கள் பற்றியும் அமைச்சர் பேசினார்.
“இந்தக் கட்டுப்பாடுகள் தளர்ப்படுமானால், அது மிகவும் கவனத்துடனும் படிப்படியாகவும் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு முறைக்குக் கூடுதல் உளைச்சல் கொடுக்காத வண்ணம் தளர்த்தப்பட வேண்டும்.
“கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஊழியர்கள் பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இது வாரத்துக்கு ஒருமுறையிலிருந்து மூன்று முறைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
“இத்தகைய வருகைகளுக்குமுன் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ஊழியர்கள் பரிசோதனை செய்துகொள்வதையும் அமைச்சு நீக்கியுள்ளது.
கடந்த வாரயிறுதியில், இத்தகைய சமூக இடங்களுக்கு ஊழியர்கள் செல்லும் எண்ணிக்கையை 500லிருந்து 3,000க்கு உயர்த்தியது. அதில் கேலாங் சிராய், ஜூ சியாட் ஆகிய இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன,” என்றும் டாக்டர் டான் சொன்னார்.
சமூக இடங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கக்கூடிய நேரம் வாரத்துக்கு ஆறு மணிநேரத்திலிருந்து எட்டு மணிநேரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புத் திட்டத்தின் முன்னோட்டம் கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது.