சிங்கப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (02-11-2021) புதிதாக 3,496 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இது, அதற்கு முந்திய நாளைவிட 1,026 அதிகம். நேற்று முன்தினம் திங்கட்கிழமை 2,470 பாதிப்புகள் பதிவாகியிருந்தன.
நேற்று முன்தினம் 1.05ஆக இருந்த வாராந்திர கிருமித்தொற்று உயர்வு விகிதம் நேற்று 1.09 ஆனது.
இது, சமூகத்தில் கடந்த வாரத்திற்கும் அதற்கு முந்திய வாரத்திற்கும் இடையிலான கிருமித்தொற்று விகிதத்தைக் காட்டுகிறது.
புதிதாக கிருமி தொற்றியோரில் 3,352 பேர் சமூகத்தில் இருப்பவர்கள், 141 பேர் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், மூவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா மொத்த பாதிப்பு 204,340 ஆனது.
இதற்கிடையே, 53 முதல் 93 வயதிற்குட்பட்ட மேலும் ஒன்பது பேர் கொரோனாவால் மாண்டுவிட்டனர். அவர்களில் தடுப்பூசி போட்டிராத இருவரைத் தவிர மற்ற அனைவர்க்கும் வேறு உடல்நலக் கோளாறுகளும் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனால், கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 430 ஆனது.
இப்போதைக்கு 1,710 பேர் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 308 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 396 படுக்கைகளில் 138 கொவிட்-19 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 150 பேர் வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இப்போதைக்கு 108 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.