ஈசூனில் ஈரடுக்குப் பேருந்து ஒன்று, டாக்சி நிறுத்துமிட மேற்கூரையின்மீது இன்று (நவம்பர் 6) மோதியது.
இதில் காயமடைந்த 63 வயது பேருந்து ஓட்டுநரும் 60, 64 வயதுடைய இரு மாதர்களும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்விரு மாதர்களும் பாதசாரிகள் என போலிஸ் கூறியது.
பிற்பகல் 1 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
டவர் டிரான்சிட் நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துச் சேவை 969 இந்த விபத்தில் சிக்கியது. தெம்பனிசில் இருந்து உட்லண்ட்சுக்கு அப்பேருந்து சென்றுகொண்டிருந்தது.
ஈசூன் எம்ஆர்டி நிலையம் அருகே அந்த டாக்சி நிறுத்துமிடம் அமைந்துள்ளது. பேருந்து மோதியதில் அந்த டாக்சி நிறுத்துமிட மேற்கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது.
விபத்தில் சம்பந்தப்பட்ட அந்தப் பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டவர் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலிஸ் விசாரணை தொடர்கிறது.