இந்தியா முழுவதும் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெற்றதாகவும் பத்தாண்டு களில் காணாத அளவுக்கு 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெற்றதாகவும் அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொள்ளைநோய் காரணமாக ஈராண்டுகளாக மெதுவடைந்து வந்த பொருளியல் மீண்டும் தலைதூக்கிவிட்டதை இது காட்டுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இனி வரும் காலத்தில் வர்த்தகம் செழித்தோங்கும் என்பதற்கான முன்னோட்டமாக தீபாவளி வியாபாரம் அமைந்துள்ளதாக அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
தீபாவளி வியாபாரம் முடிந்ததும் நவம்பர் 14 முதல் திருமண விழாக் கால வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என்று கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் பிரவீண் கன்டேல்வால் கூறினார்.
“நாடு முழுவதும் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த அளவுக்கு அதிகமான வியாபாரம் நடந்துள்ளது. டெல்லியில் மட்டும் தீபாவளி விற்பனை ரூ.25,000 கோடிக்கு நடந்துள்ளது.
“இந்தத் தீபாவளிக்கு நாடு முழுவதும் உள்ள எந்தச் சந்தையிலும் சீனத் தயாரிப்புகள் விற்கப்படவில்லை. இதனால் சீனாவுக்கு ரூ.50,000 கோடி அளவுக்கு நேரடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது,” என்றார் அவர்.
வழக்கமான ஆடையலங்காரம், இனிப்பு, பட்டாசு தவிர்த்து இந்த ஆண்டு வீட்டு அலங்காரப் பொருட்கள் எல்இடி விளக்குகள், புதுமையான விளக்குகள், கைவினைப் பொருட்கள் அதிகம் விற்பனை ஆனதாகவும் கூட்டமைப்பு தெரிவித்தது.
தங்கம், வெள்ளி நகைகள் மட்டும் தீபாவளிப் பருவத்தில் 9,000 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாக தரவுகளை சுட்டிக்காட்டி கூட்டமைப்பு தெரிவித்தது.
கொரோனா தொற்று குறைந்து, இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது விற்பனை அமோகமாக நடைபெற்றதற்கு முக்கிய காரணம் என அது குறிப்பிட்டது.